2011-10-07 14:39:51

திருத்தந்தை இந்தோனேசிய ஆயர்களுக்கு வழங்கிய ‘அட் லிமினா’ உரை


அக்.07,2011. கிறிஸ்துவின் மீட்பு, அவர் வழங்கிய அன்பு, மற்றும் மன்னிப்பு ஆகியவை பல நூற்றாண்டுகளாக இந்தோனேசிய நாட்டில் அறிவிக்கப்பட்டு வந்துள்ளன என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை திருத்தந்தையை சந்திக்கும் ‘அட் லிமினா’ என்ற சந்திப்பிற்காக உரோம் நகர் வந்திருக்கும் இந்தோனேசிய ஆயர்களை இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை, அவர்களுக்கு வழங்கிய உரையில், மறைபரப்புப் பணியில் நாம் கொள்ளும் ஆர்வம் வெறும் போதனைகளாக மட்டும் இல்லாமல், செயல்வடிவமும் பெறவேண்டும் என்று கூறினார்.
மதச் சுதந்திரம் என்பது தனிமனித அடிப்படை உரிமை என்பதை இந்தோனேசியா தன் சட்டங்களில் கொண்டுள்ளது என்றாலும், இந்தச் சுதந்திரத்தை பேணிக் காப்பதிலும், வளர்ப்பதிலும் நாம் பொறுமை காட்ட வேண்டும் என்று அந்நாட்டு ஆயர்களுக்கு திருத்தந்தை நினைவுறுத்தினார்.
இறைவனின் பிரசன்னத்தை கண்கூடாக உணரும் வகையில் இந்தோனேசியாவில் பிறரன்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள இருபால் துறவியரின் அர்ப்பணத்தைப் பாராட்டிப் பேசியத் திருத்தந்தை, இத்துறவியரும், பிற மறைமாவட்டக் குருக்களும் சரியான வழிகளில் உருவாவதைக் கண்காணிப்பது ஆயர்களின் கடமை என்பதைச் சுட்டிக் காட்டினார்.
கலாச்சாரம், மதங்கள் ஆகியவற்றின் சங்கமமாக இருக்கும் இந்தோனேசியாவில், முறையான, மனம் திறந்த பல்சமய உரையாடல்களை வளர்ப்பது இன்றியமையாத ஒரு பணி என்று திருத்தந்தை வலியுறுத்திக் கூறினார்.
உரையாடல்கள் மூலம் நாட்டின் ஒற்றுமை, அமைதி இவற்றை வளர்ப்பதில் ஆயர்கள் தனிப்பட்ட ஆர்வம் காட்ட வேண்டும் என்ற தன் ஆவலை வெளியிட்ட திருத்தந்தை 16ம் பெனடிக்ட், கூடியிருந்த ஆயர்கள் அனைவரையும் அன்னைமரியாவின் பாதுகாப்பில் ஒப்படைப்பதாகக் கூறி, தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அவர்களுக்கு வழங்கினார்.








All the contents on this site are copyrighted ©.