புலம்பெயர்ந்தோர், அகதிகள் ஆகியோருக்கு ஆற்ற வேண்டிய கடமைகள் இன்னும்
அதிகம் உள்ளன - பேராயர் தொமாசி
அக்.05,2011. சமுதாயப் புரட்சிகளாலும், இயற்கையில் உருவாகும் வறட்சி மற்றும் பசி, பட்டினிக்
கொடுமைகளாலும் நாடு விட்டு, நாடு செல்லும் புலம்பெயர்ந்தோர், அகதிகள் ஆகியோருக்கு நாம்
ஆற்ற வேண்டிய கடமைகள் இன்னும் அதிகம் உள்ளன என்று வத்திக்கான் அதிகாரி ஒருவர் கூறினார். ஜெனீவாவில்
உள்ள ஐ.நா. நிறுவனத்தில் திருப்பீடத்தின் சார்பில் நிரந்தரப் பார்வையாளராகப் பணியாற்றும்
பேராயர் சில்வானோ தொமாசி, ஐ.நா. அகதிகள் அமைப்பின் உயர்மட்டக் கூட்டத்தில் இச்செவ்வாயன்று
உரையாற்றியபோது இவ்வாறு கூறினார். 1951ம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஐ.நா. அகதிகள் அமைப்பின்
60 ஆண்டுகள் சேவையால் 4 கோடியே 30 இலட்சம் பேர் மனித மாண்புடன் வாழும் நிலையைப் பெற்றுள்ளதை
நாம் மறுக்க முடியாது என்று கூறிய பேராயர் தொமாசி, இந்தப் பணியானது நாம் வாழும் நாட்களில்
இன்னும் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மனித மாண்புக்கு பெரும்
களங்கத்தை விளைவித்த இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உருவாக்கப்பட்ட ஐ.நா. அகதிகள் அமைப்பின்
முயற்சிகளால், மனிதர்களின் அடிப்படை உரிமைகளும், சுதந்திரமும் மதிக்கப்படுகின்றன என்றாலும்,
இன்றைய நாட்களிலும் பல்வேறு நாடுகளில் உருவாக்கப்பட்டுள்ள அகதிகள் முகாம்கள் சிறைக்கூடங்களாக
இருப்பது வேதனையைத் தருகின்றன என்ற தன் கவலையையும் வெளியிட்டார் பேராயர் தொமாசி. உலகை
இன்று பெருமளவில் பாதிக்கும் அகதிகள் பிரச்சனையில் குழந்தைகளும் சிறுவர்களும் தனிப்பட்ட
முறையில் கண்காணிக்கப்படுவது நமது தனிப்பட்ட, அவரசக்கால கடமையாகிறது என்று திருப்பீட
அதிகாரி பேராயர் சில்வானோ தொமாசி வலியுறுத்திக் கூறினார்.