கந்தமால் பகுதியில் கிறிஸ்தவர்கள் இன்னும் அச்சத்துடன் வாழ்ந்து வருகிறார்கள் - அனைத்திந்திய
கிறிஸ்தவ அவை
அக்.05,2011. இந்தியாவின் பல பகுதிகளில், சிறப்பாக ஒரிஸ்ஸாவின் கந்தமால் பகுதியில் கிறிஸ்தவர்கள்
இன்னும் கவலைக்குரிய வழிகளில், அச்சத்துடன் வாழ்ந்து வருகிறார்கள் என்று அனைத்திந்திய
கிறிஸ்தவ அவை கூறியுள்ளது. தகுந்த காரணங்கள் ஏதுமின்றி இந்தியாவின் பல பகுதிகளில்
கிறிஸ்தவர்கள் தாக்கப்பட்டு வருவது அண்மைக் காலங்களில் அதிகரித்து வருகிறதென்று, அனைத்திந்திய
கிறிஸ்தவ அவை இந்தியாவின் சிறுபான்மைத் துறை அமைச்சர் Salman Khurshidக்கு அனுப்பியுள்ள
ஒரு கடிதத்தில் கூறியுள்ளது. மதத்தின் அடிப்படையில் புறந்தள்ளப்பட்டுள்ள கிறிஸ்தவ
தலித், மற்றும் பழங்குடியினரின் பல உரிமைகளை அவர்களுக்கு மீண்டும் அளிக்க வேண்டும் என்று
இக்கடிதத்தில் வலியுறுத்தி கூறப்பட்டுள்ளதென்று UCAN செய்தியொன்று கூறுகிறது. கந்தமால்
பகுதியில் நீதி இன்னும் எவ்வகையிலும் நிலைநாட்டப்படாமல் இருப்பது நாட்டுக்கே ஒரு பெரும்
அவமானம் என்றும், கந்தமால் கலவரங்களால் பாதிக்கப்பட்டோருக்கு மூன்று ஆண்டுகளுக்குப்
பிறகும் எவ்வித உதவிகளும் தரப்படவில்லை என்றும் அனைத்திந்திய கிறிஸ்தவ அவையின் பொதுச்
செயலர் ஜான் தயாள் கூறினார்.