அக்.03,2011. துபாயில் இரணடாம் உலகத் தமிழர் பொருளாதார மாநாடு அக்டோபர் 1ம் தேதி முதல்
4ம் தேதி வரை நடைபெற்று வருகிறது. இஞ்ஞாயிறு காலை நடைபெற்ற துவக்க விழாவில், மலேசிய
அரசின் தெற்காசியாவுக்கான சிறப்புத் தூதர் டத்தோ ஸ்ரீ சாமிவேலு தலைமை தாங்கினார். அவர்
தனது தலைமையுரையில், உலகெங்கிலும் வாழ்ந்து வரும் தமிழர்கள் வணிகத்துறையில் ஒன்றுபட்டு
பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்த முன்வரவேண்டும் என்றார். இரண்டாவது உலகத் தமிழர் பொருளாதார
மாநாட்டினை துவக்கி வைத்து தொடக்கவுரை நிகழ்த்திய இந்தியத் தொழில் நிறுவன விவகாரங்கள்
துறை அமைச்சர் வீரப்ப மொய்லி, தனது உரையில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பற்றி குறிப்பிட்டு,
இம்மாநாடு ஒரு புதிய அத்தியாயத்தை எழுதும் என தான் நம்புவதாகக் கூறினார். காந்தியடிகளின்
பிறந்த நாளான அக்டோபர் 2ம் தேதி உலக வன்முறை எதிர்ப்பு நாளாக அனுசரிக்கப்படுகிறது என்று
கூறிய அமைச்சர் வீரப்ப மொய்லி, முடியாதது என்று எதுவும் இல்லை, எதையும் சாதித்துக் காட்டவேண்டும்
என்ற மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்வோம் என்றார்.