2011-10-01 15:09:17

டெங்கு காய்ச்சலினின்று காப்பாற்றப்படுமாறு பாகிஸ்தான் கத்தோலிக்கர் செபம்


அக்.01,2011. பாகிஸ்தானில் டெங்கு காய்ச்சலால் 12 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் தாக்கப்பட்டிருக்கும் வேளை, இந்நோயினின்று மக்களைக் காப்பாற்றுமாறு அந்நாட்டுக் கத்தோலிக்கர் செபித்து வருகின்றனர்.
தற்சமயம் நாட்டை முடக்கிப் போட்டுள்ள டெங்கு காய்ச்சலை எகிப்தின் பத்துக் கொள்ளை நோய்கள் என்று அழைத்துள்ள லாகூர் உயர்மறைமாவட்ட குருகுல அதிபர் அருட்பணி ஆண்ட்ரூ நிசாரி, தினமும் செபமாலையும் குடும்பச் செபமும் செய்து இறைவனிடம் செபிக்குமாறு கத்தோலிக்கரைக் கேட்டுள்ளார்.
கொசுக்கள் பெருமளவில் பரவி மக்களைத் தாக்குகின்றன, வெள்ளம் எல்லாவற்றையும் அழித்து வருகின்றது, வீடுகள் இருளுக்குள் கிடக்கின்றன, மின்சாரத் தட்டுப்பாடும் அதிகமாக இருக்கின்றது என்று கூறினார் அருட்பணி நிசாரி.
பாகிஸ்தானில் கடந்த ஆண்டில் டெங்கு காய்ச்சலால் 11,024 பேர் தாக்கப்பட்டனர் மற்றும் 40 பேர் இறந்தனர். ஆனால் தற்சமயம் இதனால் 12 ஆயிரத்துக்கு அதிகமானோர் தாக்கப்பட்டனர் மற்றும் 125 பேர் இறந்துள்ளனர் என்று உலக நலவாழ்வு நிறுவனம் அறிவித்தது.








All the contents on this site are copyrighted ©.