இந்தியாவில் புற்றுநோய்க்கு முக்கிய காரணம் புகையிலைப் பயன்பாடு-உலக நலவாழ்வு நிறுவனம்
எச்சரிக்கை
அக்.01,2011. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் புகையிலை பழக்கத்தால், இந்தியாவில் ஆண்டுக்கு
சராசரியாக ஒன்பது இலட்சம் பேர் இறக்கும்வேளை, வருங்காலத்தில் இவ்வெண்ணிக்கை அதிகரிக்கும்
அபாயம் உள்ளது என்று ஆய்வு ஒன்றில் கூறப்பட்டுள்ளது. உலகில் புகையிலையைப் பயன்படுத்துவோர்
குறித்து ஐ.நா. வின் உலக சுகாதார அமைப்பு நடத்திய ஆய்வில், இந்தியாவில் தினமும் 2,500
பேர் வீதம் புகையிலையால் பல நோய்களுக்கு உட்பட்டு இறக்கின்றனர், அதாவது 40 வினாடிக்கு
ஒருவர் வீதம் இறக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது என்று தெரிய வந்துள்ளது. புகையிலை
தொடர்பான நோய்களால் 2020ம் ஆண்டுவாக்கில் இந்தியாவில் 20 இலட்சம் பேர் இறக்கும் நிலை
ஏற்படும்' என்றும், தமிழகத்தில் மட்டும் புகையிலையால், 16.4 விழுக்காட்டினர் பாதிக்கப்பட்டுள்ளனர்
என்றும் அவ்வாய்வு கூறுகிறது. சென்னை நகரில் "கடந்த 2005ம் ஆண்டில் 2 விழுக்காட்டுப்
பெண்களிடம் புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தது, இப்பழக்கம் தற்போது மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.
இதனால், இவர்களில் 15.2 விழுக்காட்டுப் பெண்கள் புகையிலை தொடர்பான புற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர்.
இதில், மும்பை, டில்லி, கொல்கட்டா என மற்ற நகரங்களோடு ஒப்பிடும் போது சென்னையில்தான்
அதிகம் என்று அவ்வாய்வு கூறுகிறது.