2011-09-30 16:08:49

வத்திக்கான் அதிகாரி : ஜப்பான் அணுக்கசிவுப் பேரிடர் உலகளாவியப் பிரச்சனையை முன்வைக்கிறது


செப்.30,2011. இவ்வாண்டு ஜப்பானில் இடம் பெற்ற அணுக்கசிவுப் பேரிடர், உலகில் அணுமின் நிலையங்களின் பாதுகாப்பு குறித்த புதிய கவலைகளை ஏற்படுத்தியுள்ளது என்று திருப்பீட அதிகாரி ஒருவர் கூறினார்.
ஆஸ்ட்ரியாவின் வியன்னாவில் இருக்கின்ற உலக அணுசக்திக் கட்டுப்பாட்டு நிறுவனத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய, அணுசக்தி விவகாரங்களுக்கானத் திருப்பீடப் பிரதிநிதி பேரருட்திரு Michael Banach, அணுக்கசிவினால் ஏற்படும் எதிர்விளைவுகள் பற்றி விளக்கினார்.
Fukushima-Daiichi அணுக்கசிவுப் பேரிடர் எழுப்பும் பல அடிப்படைப் பிரச்சனைகள் களையப்பட வேண்டும் என்றுரைத்த அவர், ஜப்பானின் வளமையான வேளாண் பகுதிகளில் ஒன்றான இவ்விடத்தில் ஏற்பட்ட இப்பேரிடரின் எதிர்விளைவுகள், பொருளாதார, மருத்துவ மற்றும் மறுசீரமைப்பில் பெரும் செலவை உண்டுபண்ணியுள்ளன என்று குறிப்பிட்டார்.
கடந்த மார்ச் மாதத்தில் ஜப்பானில் இடம் பெற்ற நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் 24 ஆயிரம் பேர் இறந்தனர். அச்சமயம் ஏற்பட்ட அணுக்கசிவினால் காற்றும் நீரும் அசுத்தமடைந்தன. இதனால் 2 இலட்சத்துக்கு மேற்பட்டோர் தங்கள் வீடுகளை விட்டு அப்புறப்படுத்தப்பட்டனர். இது, 1945ம் ஆண்டில் அணுகுண்டு வெடிப்பினால் ஏற்பட்ட பாதிப்பைவிட அதிகம் என்று சொல்லப்படுகிறது.








All the contents on this site are copyrighted ©.