அக்டோபர் 9, பொதுமக்கள் கருத்து வாக்கெடுப்பில் முழு ஈடுபாட்டுடன் பங்கெடுக்க பராகுவே
ஆயர்கள் வேண்டுகோள்
செப்.30,2011. பராகுவே நாட்டில் இந்த அக்டோபர் 9ம் தேதி நடைபெறும் பொதுமக்கள் கருத்து
வாக்கெடுப்பில் கத்தோலிக்கரும் அனைத்துக் குடிமக்களும் முழு ஈடுபாட்டுடன் பங்கெடுக்க
வேண்டுமென்று அந்நாட்டு ஆயர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தென் அமெரிக்க நாடான பராகுவேயின்
அரசியல் அமைப்பில் தேவைப்படும் மாற்றங்கள் குறித்து குடிமக்கள் தங்கள் அபிப்பிராயங்களை
வெளியிடுவதற்கென அந்நாட்டு உச்சநீதிமன்றம் பொதுமக்கள் கருத்து வாக்கெடுப்பை நடத்தத் திட்டமிட்டுள்ளது. வாக்களித்தல்
என்பது குடிமக்களின் உரிமை மட்டுமல்ல, அது கடமையுமாகும் என்றுரைக்கும் ஆயர்களின் அறிக்கை,
ஒவ்வொருவரும் பொதுநலனை மனத்திற்கொண்டு தங்கள் மனசாட்சியின்படி ஓட்டளிக்க வேண்டுமென்று
கூறுகிறது. உள்நாட்டிலும் வேறு நாடுகளிலும் வாழும் சுமார் பத்து இலட்சம் பராகுவே குடிமக்கள்
இந்தப் பொதுமக்கள் கருத்து வாக்கெடுப்பில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள். 2013ம்
ஆண்டில் நடைபெறும் பொதுத் தேர்தலை மனத்தில் வைத்து அரசியல்வாதிகளும் வாக்குகளை விலைக்கு
வாங்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது.