கருக்கலைப்பு எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வாக அமையாது - மெக்சிகோ நாட்டு கர்தினால்
செப்.28,2011. கருக்கலைப்பு எந்த வகையிலும், எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வாக அமையாது
என்று மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த கர்தினால் Norberto Rivera Carrera கூறினார். கருக்கலைப்பை
சட்டமாக்கும் முயற்சிகளில் மெக்சிகோ அரசு ஈடுபட்டுள்ள இவ்வேளையில், இந்தப் பிரச்சனை அந்நாட்டின்
உச்ச நீதி மன்றத்தில் விவாதிக்கப்பட்டு வருவதையொட்டி தன கருத்தை வெளியிட்ட மெக்சிகோ நகரப்
பேராயர் கர்தினால் Carrera இவ்வாறு கூறினார். பணியிடங்களிலும், குடும்பங்களிலும் கருக்கலைப்பை
மேற்கொள்வதற்கு பெண்கள் கட்டாயப்படுத்தப்படும்போது, திருச்சபை அவர்களுக்குப் பக்கபலமாக
இருந்து நல்ல முடிவுகளை எடுக்க உதவிகள் செய்து வருகிறதென்று கர்தினால் Carrera சுட்டிக்காட்டினார். கருவில்
வளரும் உயிர்களை ஒரு வர்த்தகப் பொருளைப்போல் கருதும் போக்கு இவ்வுலகில் பெருகிவருவதைச்
சுட்டிக்காட்டிய கர்தினால் Carrera, ஒரு குழந்தை எப்போதும் கடவுள் வழங்கும் ஒரு கொடையே
தவிர மனிதர்களின் உடமைப் பொருள் அல்ல என்று கூறினார்.