எர்ஃபூர்ட் பேராலய வளாகத்தில் திருத்தந்தையின் திருப்பலி மறையுரை:
செப்.24,2011. இறைவனுக்கு நம் முழு இதயத்தோடு நன்றி நவில நம் ஒவ்வொருவருக்கும் காரணம்
உள்ளது. ஜெர்மன் ஜனநாயக் குடியரசின் கடந்த கால கொடுங்கோலாட்சிகள், கிறிஸ்தவ மறையின் மீது
அமில மழை போல் செயல்பட்டன. அதன் பிற்காலத்தைய விளைவுகள் தற்போதும் சில துறைகளில் உணரப்பட்டு
வருகின்றன. இருப்பினும் கடந்த 20 ஆண்டுகளில் நல் மாற்றங்களைக் கண்டுவருகிறோம், குறிப்பாக,
இறைவன் நம்மை எப்போதும் கைவிடுவதில்லை என்பதில் உறுதியோடு செயல்படுகிறோம். 'கடவுள் எங்கிருக்கிறாரோ
அங்கே வருங்காலமும் உள்ளது'. நம் புதிய சுதந்திரம் என்பது மேலும் மாண்பையும், புதிய வாய்ப்புகளையும்,
புதுப்பித்தலையும் கோவில்களின் விரிவாக்கத்தையும் தந்துள்ளது. கடந்த காலங்களில் அர்ப்பணத்துடன்
செயல்பட்ட கிறிஸ்தவர்கள், திருச்சபைக்காக பல்வேறு துன்பங்களை மனமுவந்து தாங்கியுள்ளனர்.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் அகதிகளிடையே திருச்சபை ஆற்றிய சிறப்புமிக்கப் பணிகளை
நான் இங்கு நினைவுகூர விழைகின்றேன். திருச்சபை விரோத சூழல்கள் நிலவி வந்த காலத்திலும்
தங்கள் குழந்தைகளைக் கிறிஸ்தவ விசுவாசத்தில் வளர்த்த பெற்றோருக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன்.
பல புனிதர்களின் தியாகத்துடன் கூடிய மறைப்பணியால் வளர்ந்துள்ள எர்ஃபூர்ட் மறைமாவட்டத்தின்
வரலாற்றில் சிறப்பான விதத்தில் டுரிஞ்சேயின் புனித எலிசபெத்தை நினைவுகூர்கின்றேன். ஏழைகள்
மற்றும் நோயாளிகளிடையே சிறப்புச் சேவையாற்றிய இப்புனிதை தன் 24ம் வயதிலேயே உயிரிழந்தாலும்,
இவரின் புனிதத்தன்மையின் கனிகள் அளவிட முடியாதவை. நம் விசுவாசத்தின் முழுமை நிலையை கண்டுகொள்ள
இப்புனிதை நமக்கு உதவ முடியும். இறைவனுடன் ஆன உறவில் நாம் வாழமுடியும் அது நன்மையானதும்கூட
எனப் புனிதர்கள் நமக்குக் காட்டி நிற்கின்றார்கள். விசுவாசம் என்பது மற்றவர்களுடன் பகிர்ந்துக்
கொள்ளப்படவேண்டிய ஒன்று என்பது அதன் அடிப்படைக்கூறாக உள்ளது. விசுவாசத்திற்காக முதலில்
நாம் இறைவனுக்கு நன்றி கூறவேண்டும். இரண்டாவதாக, நம் உடன்வாழ்வோருக்கும் நன்றி நவில வேண்டும்.
புனிதர்கள் என்பவர்கள் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும், அவர்களால் உலகை மாற்ற முடியும்
என்பதையும் நினைவு கூருங்கள். 1989ம் ஆண்டு இந்நாட்டில் இடம்பெற்ற அரசியல் மாற்றங்கள்,
வளமைக்கும் சுதந்திர இயங்கலுக்கும் ஆன ஏக்கத்தினால் மட்டும் பிறந்தவையல்ல, மாறாக, உண்மைக்கான
ஏக்கத்தினாலும் விளைந்தவை. கடின முயற்சிகளுக்குப்பின் கிட்டிய இந்த சுதந்திரத்தைப்
பொறுப்புடன் வடிவமைக்க வேண்டியது நம் கடமையாகிறது. கிறிஸ்துவுக்கான நம் சாட்சியம் நாம்
வாழும் இவ்வுலகில் கேட்கப்படவும் காணப்படவும், புனிதர்களின் எடுத்துக்காட்டுகள் நம்மைத்
தூண்டுவதாக.