ஸ்காண்டிநேவியாவில் கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது
செப் 23, 2011. ஸ்காண்டிநேவியாவில் கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை அண்மைக்காலங்களில் அதிகரித்து
வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஜெர்மனியின் Paderborn நகரில் கூடிய தல
ஆயர்களின் கூட்டத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, கத்தோலிக்க மறைக்கு மனம் திரும்புவோர்
மற்றும் திருமுழுக்குப் பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரியவந்துள்ளது. அண்மைப்
புள்ளி விவரங்களின்படி, டென்மார்க், ஸ்வீடன், ஃபின்லாந்து, நார்வே மற்றும் ஐஸ்லாந்தில்
ஏறத்தாழ நான்கு இலட்சத்து முப்பதாயிரம் கத்தோலிக்கர்கள் வாழ்கின்றனர். நார்வேயின் Trondheim-Tromso
மறைமாவட்டத்தில் கடந்த ஆண்டில் கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை இரு மடங்காகியுள்ளதாகவும்
அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்காண்டிநேவிய நாடுகளில் புனிதத் தலங்களை சந்திக்கும் திருப்பயணிகளின்
எண்ணிக்கை அதிகரித்தும், கிறிஸ்தவ ஒன்றிப்பு முயற்சிகள் பெருகியும் வரும் சூழலில், வரும்
ஆண்டு மார்ச் மாதம் ஸ்காண்டிநேவிய ஆயர் பேரவை, லூத்தரன் ஆயர்களுடனான கூட்டத்திற்கு ஏற்பாடு
செய்துள்ளது.