2011-09-20 16:14:16

அமெரிக்கக் குடும்பங்களைப் பாதிக்கும் வறுமை பற்றிக் மறையுரைகளில் எடுத்துச் சொல்லுமாறு குருக்களுக்கு அழைப்பு


செப்.20,2011. அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்களும் அருட்பணியாளர்களும் தங்களது மறையுரைகளில் அந்நாட்டின் குடும்பங்களும் சமூகங்களும் தற்போது எதிர்கொள்ளும் கடும் பொருளாதார நெருக்கடி குறித்துப் பேசுமாறு கேட்டுக் கொண்டார் அந்நாட்டு ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் திமோத்தி டோலன்.
நிர்வாகக் குழுவின் பரிந்துரையின் பேரில் அந்நாட்டின் அனைத்து ஆயர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ள பேராயர் டோலன், மேய்ப்பர்கள், ஆசிரியர்கள், தலைவர்கள் என்ற முறையில் ஆயர்களும் அருட்பணியாளர்களும் தங்களுக்கு இருக்கும் வாய்ப்புக்களைப் பயன்படுத்தி, இந்தச் சமுதாயத்தில் நிலவும் வேலைவாய்ப்பின்மை மற்றும் வறுமையை பொது மக்களின் கவனத்திற்குக் கொண்டு செல்லுமாறு கேட்டுள்ளார்.
அமெரிக்க ஐக்கிய நாட்டில் பரவலாகக் காணப்படும் வேலைவாய்ப்பின்மை, தரமற்ற வேலை, ஏழ்மை ஆகியவை மனித மாண்பின் தன்மையைக் குறைக்கின்றன மற்றும் குழந்தைகளையும் குடும்பங்களையும் பாதிக்கின்றன என்றும் பேராயர் டோலனின் கடிதம் கூறுகிறது.
அமெரிக்க ஐக்கிய நாட்டு மக்கள் கணக்கெடுப்பு அலுவலகம் கடந்த வாரத்தில் வெளியிட்ட புள்ளி விபரங்களின்படி, அந்நாட்டில் 2010ம் ஆண்டில், ஒரு கோடியே 60 இலட்சம் சிறார் உட்பட 4 கோடியே 60 இலட்சம் பேர் வறுமையில் வாழ்ந்தனர் என்பதையும் பேராயர் டோலன் சுட்டிக் காட்டியுள்ளார்.







All the contents on this site are copyrighted ©.