2011-09-17 15:36:55

ஜெர்மன் எதிர்ப்பு அச்சுறுத்தல்கள் குறித்து வத்திக்கான் கருத்து


செப்.17,2011. திருத்தந்தை 16ம் பெனடிக்ட், தனது அண்மை ஜெர்மன் நாட்டுத் திருப்பயணத்தின் போது அவர் பாராளுமன்றத்தில் உரையாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவிருப்பதாக அச்சுறுத்தல்கள் கிளம்பியிருக்கும் வேளை, ஏற்கனவே திட்டமிட்டபடி அவர் பாராளுமன்றத்தில் உரையாற்றுவார் என்று திருப்பீடப் பேச்சாளர் அறிவித்தார்.
வருகிற வியாழன் காலை ஜெர்மனிக்கானத் தனது முதல் அதிகாரப்பூர்வத் திருப்பயணத்தைத் தொடங்கும் திருத்தந்தை, அன்று மாலையே பாராளுமன்றத்தில் உரையாற்றுவதாகத் திட்டமிடப்பட்டுள்ளது. அந்நாட்டின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள், திருத்தந்தை இங்கு பேசுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்யப் போவதாகவும், பாராளுமன்ற வளாகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தப்போவதாகவும் அச்சுறுத்தியுள்ளனர்.
இது குறித்துக் கருத்து தெரிவித்த இயேசு சபை அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி, திருத்தந்தையின் உரையை எல்லாரும் கேட்டால் அது மகிழ்ச்சியைக் கொடுக்கும் என்றார்.
அப்படி அவர்கள் கலந்து கொள்ளவில்லையென்றால் அது தங்களைப் பாதிக்காது எனவும் பாராளுமன்றத்தில் இருப்பவர்களுக்குத் திருத்தந்தை உரையாற்றுவார் எனவும் திருப்பீடப் பேச்சாளர் அறிவித்தார்.
திருத்தந்தையின் ஜெர்மனிக்கானத் திருப்பயணம் இம்மாதம் 22 முதல் 25 வரை இடம் பெறும்.








All the contents on this site are copyrighted ©.