உரோம் நகரிலும், ஜெர்மனியின் Freiburgநகரிலும்
திருத்தந்தை எழுதிய புத்தகங்கள் அடங்கிய கண்காட்சி
செப்.14,2011. திருத்தந்தை மேற்கொள்ளவிருக்கும் ஜெர்மன் நாட்டுத் திருப்பயணத்தையொட்டி,
அவர் எழுதியுள்ள பல புத்தகங்கள் அடங்கிய கண்காட்சி ஒன்று உரோம் நகரிலும், ஜெர்மனியின்
Freiburg நகரிலும் திறந்து வைக்கப்படும் என்று வத்திக்கான் பதிப்பாளர் இல்லம் இச்செவ்வாயன்று
கூறியது. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கர்தினாலாக இருந்த காலத்திலிருந்து அவர் எழுதிய
பல புத்தகங்களும், அவற்றின் பல மொழிபெயர்ப்புப் பதிப்புக்களும் அடங்கிய சுமார் 600 புத்தகங்கள்
இந்தக் கண்காட்சியில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கண்காட்சி முதலில்
திருத்தந்தையர்களின் கோடை விடுமுறை இல்லமான காஸ்தெல் கந்தோல்போவில் திருத்தந்தையின் பார்வைக்கு
வைக்கப்படும் என்றும், பின்னர் இக்கண்காட்சி இவ்வெள்ளியன்று வத்திக்கானிலும், பின்னர்
செப்டம்பர் 24ம் தேதி Freiburgலும் திறக்கப்படும் என்றும் இச்செய்திக்குறிப்பு கூறியுள்ளது.