2011-09-13 15:06:38

மும்பையில் உள்ள புகழ்பெற்ற மரியன்னைத் திருத்தலத்தில் எல்.கே.அத்வானி


செப்.13,2011. இத்திங்களன்று கொண்டாடப்பட்ட மரியாவின் புனிதப்பெயர் திருவிழாவையொட்டி, பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவரான திரு எல்.கே.அத்வானி மும்பையில் உள்ள புகழ்பெற்ற மரியன்னைத் திருத்தலத்திற்குச் சென்றார்.
செப்டம்பர் மாதம் மரியன்னையின் பக்தியால் ஈர்க்கப்பட்டு, மும்பையின் பாந்த்ரா மரியன்னை பசிலிக்காப் பேராலயத்திற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர் என்றும், இவர்களில் 30 விழுக்காட்டினரே கிறிஸ்தவர்கள் என்றும் பசிலிக்காப் பேராலயத்தின் உதவி அதிபர் அருள்தந்தை Aniceto Pereira கூறினார்.
மரியன்னையின் புனிதப்பெயர் திருவிழாவான இத்திங்களன்று திரு எல்.கே.அத்வானி இப்பேராலயத்திற்கு வந்து அன்னையின் பாதங்களில் மலர்மாலை சாற்றி, வணங்கிச் சென்றார் என்று ஆசிய செய்தி நிறுவனம் கூறியது.
உள்ளூர் ஊடங்களுக்குப் பேட்டியளித்த எல்.கே.அத்வானி, கராச்சியில் கிறிஸ்தவ பள்ளியில் தான் படித்ததைச் சுட்டிக் காட்டி, தான் இங்கு வந்து குருக்களைச் சந்தித்து ஆசீர் பெற்றுச் செல்வது மனதுக்கு மகிழ்வையும், நிறைவையும் தருகிறதென்று கூறினார்.
பேராலயத்திற்கு வந்த திரு எல்.கே.அத்வானி இத்திருத்தலத்தின் மீதும், கிறிஸ்தவ மதத்தின் மீதும் பெரும் மரியாதை காட்டினார் என்றும் அவருக்கு இப்பசிலிக்காப் பேராலயத்தின் வரலாறு அடங்கிய புத்தகத்தைத் தான் அளித்ததாகவும் உதவி அதிபர் அருள்தந்தை Aniceto Pereira கூறினார்.








All the contents on this site are copyrighted ©.