2011-09-12 15:57:37

ஜப்பான் நிலநடுக்கம், சுனாமி ஆகியவற்றின் ஆறாம் மாத நினைவு


செப்.12,2011. அமெரிக்காவில் பல துயரங்களை விளைவித்த செப்டம்பர் 11ம் தேதியின் பத்தாம் ஆண்டு நினைவு கடைபிடிக்கப்பட்ட இந்த ஞாயிறன்று ஜப்பானிலும் மற்றொரு வேதனையின் நினைவு கடைபிடிக்கப்பட்டது.
இந்த ஆண்டு மார்ச் 11ம் தேதி ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம், சுனாமி ஆகியவற்றின் அழிவுகளில் இருந்து மீண்டுவர முயற்சிகள் செய்து வரும் ஜப்பான் மக்கள், அந்த நிகழ்வின் ஆறாம் மாத நினைவைக் கடைபிடித்தனர்.
டோக்கியோவில் ஜப்பான் கத்தோலிக்க ஆயர் பேரவையும், தேசிய கிறிஸ்தவக் கழகமும் இணைந்து அந்நகரின் Shitaya கோவிலில் வழிபாடு ஒன்றை மேற்கொண்டன. இக்கிறிஸ்தவ ஒன்றிப்பு வழிபாட்டில் பயன்படுத்தப்பட்ட விசுவாசிகள் மன்றாட்டை ஜப்பான் ஆயர் பேரவையின் தலைவரான Osaka பேராயர் Jun Ikenaga உருவாக்கியிருந்தார்.
இந்த ஆறாம் மாத நினைவையொட்டி இப்பேரிடர்களால் மிக அதிக அளவில் பாதிப்புக்களுக்கு உள்ளான Sendai மறைமாவட்டத்தின் ஆயரான Tetsuo Hiraga செய்தியொன்றை வெளியிட்டிருந்தார்.
இத்துயர நிகழ்வுகளின் ஆறாம் மாதம் முடிவடையும் இவ்வேளையில் நாம் 'புதுப் படைப்பு' என்று உயிர்ப்புத் திருநாளன்று வெளியிட்ட நமது திட்டங்களின் இரண்டாம் நிலைக்குள் அடியெடுத்து வைக்கிறோம் என்றும், இந்த இரண்டாம் நிலை 2013ம் ஆண்டு மார்ச் மாதம் நிறைவுறும் என்று எதிர்பார்ப்பதாகவும் ஆயர் இச்செய்தியில் கூறியுள்ளார்.








All the contents on this site are copyrighted ©.