தென் சூடான் மக்கள் ஒப்புரவை வளர்க்கும் முயற்சிகளில் அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும்
- சூடான் கத்தோலிக்க ஆயர்கள் அவை அழைப்பு
செப்.09,2011. உலக நாடுகள் வரிசையில் அண்மையில் சேர்க்கப்பட்ட தெற்கு சூடான், பிரச்சனைகள்
பலவற்றைச் சந்தித்து வந்தாலும், வன்முறையற்ற, ஒப்புரவை வளர்க்கும் முயற்சிகளில் அரசுடன்
இணைந்து மக்கள் செயல்பட வேண்டும் என்று சூடான் கத்தோலிக்க ஆயர்கள் அவை அழைப்பு விடுத்துள்ளது. இவ்வியாழன்
வரை அந்நாட்டில் நடைபெற்ற ஆயர்கள் அவையின் மூன்று நாள் கூட்டத்தின் இறுதியில், ஆயர்கள்
இணைந்து வெளியிட்ட ஓர் அறிக்கையில், பல்வேறு இனம், மொழி இவைகளை உள்ளடக்கிய ஒரு நாட்டை
உருவாக்க அனைவரும் கடமைப் பட்டுள்ளோம் என்று கூறியுள்ளனர். ஒவ்வோர் இனமும், குழுவும்
தங்களுக்குரிய உரிமைகளைப் பெறுவதில் மட்டும் குறியாக இல்லாமல், அனைவரும் இணைந்து இந்த
நாட்டைக் கட்டியெழுப்ப, கடின உழைப்பு என்ற கலாச்சாரத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று
ஆயர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பல்வேறு இனங்கள், குழுக்களுக்கிடையே உருவாகும்
உரிமைப் பிரச்சனைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்ப்பதை விடுத்து, ஆயுதங்களையும் வன்முறையையும்
மக்கள் நம்பி வாழ்வது நாட்டை நல்லதொரு எதிர்காலத்திற்கு அழைத்துச் செல்லாது என்று ஆயர்கள்
எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஜூலை 9ம் தேதி தனி நாடாகப் பிரிந்த தெற்கு சூடான், தற்போது
இரு மாதங்களை நிறைவு செய்துள்ளது.