தாய்மைப்பேறுகால விடுப்பு குறித்த உலக தொழில் நிறுவனத்தின் நடவடிக்கைக்கு சுவிட்சர்லாந்து
ஆயர்கள் ஆதரவு
செப்.09,2011. தாய்மைப்பேறுகால விடுப்பு மற்றும் தாய்ப்பால் கொடுப்பதை ஊக்குவித்தல் குறித்த
சர்வதேச தொழில் நிறுவனத்தின் ஒப்பந்த எண் 183ல் மாற்றங்கள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைக்கு
சுவிட்சர்லாந்து கத்தோலிக்க ஆயர்கள் தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளனர். இந்த ஒப்பந்தத்தின்
மூலம் வழங்கப்படும் பாதுகாப்பு, குடும்பங்களுக்கு மட்டுமன்றி, வாழ்வை ஊக்குவிக்கும் சமுதாயத்திற்கும்
கிடைக்கின்றது என்று, சுவிட்சர்லாந்து ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதி ஆணையம் வெளியிட்ட
அறிக்கை கூறுகின்றது. சுவிட்சர்லாந்தில் 14 விழுக்காட்டுப் பெண்களே, தாய்மைப்பேறுகால
ஆறுமாத விடுப்பை எடுக்கின்றனர் என்று 2003ம் ஆண்டின் தேசியக் கணக்கெடுப்புக் கூறுவதாகக்
கூறும் அவ்வறிக்கை, குழந்தை பிறந்து 14 வாரங்களுக்குப் பின்னர் பல பெண்கள் வேலைக்குத்
திரும்புவதால் அந்தச் சமயத்தில் தாய்-சேய்க்குக் கொடுக்கப்பட வேண்டிய கவனம் இல்லாமல்
போகின்றது என்று தெரிவிக்கிறது. மனிதன் பற்றிய கிறிஸ்தவக் கண்ணோட்டத்தில் ஆணும் பெண்ணும்
சமமாண்பைக் கொண்டுள்ளனர் என்பதையும் அவ்வறிக்கை சுட்டிக் காட்டுகின்றது.