Irom Chanu Sharmilaவின் உண்ணாநோன்புப் போராட்டத்தை ஆதரிக்க இந்தியக் கிறிஸ்தவத்
தலைவர்கள் முடிவு
செப்.07,2011. கடந்த 11 ஆண்டுகளாக உண்ணாநோன்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள Irom Chanu
Sharmilaவுடன் இணைந்து, அவரது கோரிக்கைகளை வலியுறுத்த இந்தியக் கிறிஸ்தவத் தலைவர்கள்
முடிவு செய்துள்ளனர். இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் இராணுவத்தினர் பல
ஆண்டுகளாக மேற்கொண்டுள்ள அளவுகடந்த அடக்கு முறைகள் நிறுத்தப்படவேண்டுமென்று 37 வயதான
Sharmila கடந்த 11 ஆண்டுகளாக உண்ணா நோன்பு போராட்டம் மேற்கொண்டுள்ளார். அண்மையில்
புதுடில்லியில் உண்ணா நோன்புப் போராட்டத்தை மேற்கொண்ட அன்னா ஹசாரே, மற்றும் ஷர்மிளா ஆகியோரின்
நேர்மையான, வன்முறையற்ற முயற்சிகள் நாட்டின் மனசாட்சியைத் தட்டியெழுப்பியுள்ளதென்று குவஹாத்தி
பேராயர் தாமஸ் மேனம்பரம்பில் கூறினார்.ஷர்மிளா மேற்கொண்டுள்ள இந்தப் போராட்டத்திற்கு
ஆதரவு அளிக்கும் வகையில், அக்டோபர் 2 முதல் டிசம்பர் 10 முடிய நாட்டின் பல்வேறு தலைநகரங்களில்
மக்களின் கையெழுத்துக்கள் பெறப்படும். அகில உலக மனித உரிமைகள் நாளான டிசம்பர் 10ம் தேதி
இந்தக் கையெழுத்துக்கள் இந்திய அரசுத் தலைவர் பிரதிபா பாட்டிலிடம் வழங்கப்படும். இதனைத்
தொடர்ந்து, அன்று ஒரு சமாதான பேரணியும், உண்ணா நோன்பும் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.