2011-09-03 14:49:36

ஞாயிறு சிந்தனை


RealAudioMP3 கடந்த ஐந்து ஆண்டுகளாக மின்னஞ்சலில் ஒரு சிறு கட்டுரை சுற்றி, சுற்றி வருகிறது. இந்த மின்னஞ்சல் எனக்கே பத்து முறைகளுக்கும் மேல் என் நண்பர்களால் அனுப்பப்பட்டுள்ளது. புகழ்பெற்ற Coca Cola நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாகி Brian G.Dyson என்பவர் குடும்ப உறவுகள் பற்றி எழுதிய சிறு கட்டுரை இது.
பல பந்துகளை ஒரே நேரத்தில் தூக்கிப் போட்டுப் பிடிக்கும் வித்தையை நாம் அனைவரும் பார்த்திருக்கிறோம். இந்த வித்தையின்போது, கையில் இருப்பது ஒன்று அல்லது இரண்டு பந்துகள் என்றால், அந்தரத்தில் சுற்றிவரும் பந்துகள் இரண்டு அல்லது மூன்று இருக்கும். இந்த வித்தையை அனைவரும் செய்துவிட முடியாது. தனித் திறமை வேண்டும். இந்த வித்தையோடு வாழ்வை ஒப்பிட்டு Brian G.Dyson எழுதியுள்ள இக்கட்டுரையிலிருந்து முதல் சில வரிகளை மட்டும் இங்கு குறிப்பிடுகிறேன்:
பல பந்துகளை ஒரே நேரத்தில் தூக்கிப் போட்டுப் பிடிக்கும் வித்தையைப் போல, வாழ்க்கையைக் கற்பனை செய்து பாருங்கள். உங்கள் கையில் ஐந்து பந்துகள் உள்ளன. அவை... நீங்கள் செய்யும் தொழில், உங்கள் குடும்பம், உடல் நலம், நண்பர்கள் மற்றும் உங்கள் மனம். இந்த ஐந்து பந்துகளில் உங்கள் தொழில் என்பது மட்டும் ஒரு இரப்பர் பந்து. அது கைதவறி கீழே விழுந்தாலும், மறுபடி எகிறி குதித்து உங்கள் கைகளுக்கு வந்துவிடும். ஆனால், மற்ற நான்கு பந்துகள் - அதாவது குடும்பம், உடல்நலம், நண்பர்கள், மனம் ஆகிய நான்கும் கண்ணாடியால் ஆனவை. அவை கீழே விழுந்தால், சிதறி விடும். அவற்றை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வருவது இயலாத காரியம்.
வாழ்வின் மிக முக்கிய அம்சங்களில் ஒன்றான நமது குடும்ப உறவுகள் கண்ணாடி பந்துகள்... தவறினால் சிதறிவிடும். குடும்ப உறவுகளைப் பற்றிய சில எளிய, தெளிவான பாடங்களை நாம் புரிந்து கொள்ள தவறுகிறோம், அல்லது, புரிந்து கொண்டாலும் பின்பற்றத் தவறுகிறோம் என்பதைச் ஆழமாக அலசிப்பார்க்க இன்றைய ஞாயிறு சிந்தனை நம்மை அழைக்கிறது.

ஜூலை மாதம் நான் கோடை விடுமுறையில் இருந்தேன். அந்நேரத்தில், நமது தமிழ் தொலைக்காட்சிகளில் வரும் இரண்டு மெகாத் தொடர்களின் ஒரு சில பகுதிகளைக் காணும் வாய்ப்பு கிடைத்தது... இதை வாய்ப்பு என்பதா, அல்லது நிர்ப்பந்தம் என்பதா... என்று சொல்லத் தெரியவில்லை. அந்த இரு தொடர்களிலும் குடும்பத்திற்குள் நிகழும் பிரச்சனைகள் ஒவ்வொரு நாளும் காட்டப்பட்டன. பிரச்சனைகள் ஒன்றா, இரண்டா? அவை ஒன்றன்பின் ஒன்றாக சங்கிலி போல நீண்டு கொண்டே செல்வதாக... அல்லது, பிரச்சனைகள் ஒன்றுக்கு மேல் ஒன்றாக ஒரு மலைபோல குவிவதாக காட்டப்பட்டன. இந்தச் சங்கிலிகளால் கட்டுண்டு, அல்லது இந்த மலைகளுக்குக் கீழ் நசுக்கப்பட்டு அந்த கதாபாத்திரங்கள் படும் வேதனைகள் ஒவ்வொரு நாளும் வெகு நேரம் காட்டப்பட்டன.

நான் பார்த்த அந்தத் தொடர்கள், தற்போது தமிழ் நாட்டில் 400 அல்லது 500 பகுதிகளைத் தாண்டி, வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என்று கேள்விப்படுகிறேன். இந்தத் தொடர்களின் வெற்றிக்குக் காரணம்... பெரும்பாலான இரசிகர்களின் ஈடுபாடு. ‘இந்தத் தொடர்களில் காட்டப்படும் பிரச்சனைகள்தானே நம் குடும்பங்களிலும் நடக்கின்றன’ என்று சொல்லும் அளவுக்கு இத்தொடர்கள் இரசிகர்கள் மனதில் அரியணை கொண்டுள்ளன என்று கேள்விப்படுகிறேன். அவ்வப்போது நிஜமானக் குடும்பத்தில் மனத்தாங்கல்கள், வாக்குவாதங்கள் நிகழும்போது, இத்தொடர்களில் வரும் நிகழ்ச்சிகள் பின்புலத்தில் இந்தக் குடும்பங்களைப் பாதிக்கின்றனவோ என்று சந்தேகப்படுகிறேன். நான் கேள்விப்படுவதும், சந்தேகப்படுவதும் உண்மையாக இருக்கக் கூடாது என்பது என் விருப்பம், என் செபம்.

குடும்பப் பிரச்சனைகளைப் பற்றி நம் தொலைக்காட்சித் தொடர்கள் சொல்வதைப் பரவலாக ஏற்றுக்கொள்ளும் நம்மிடம், பிரச்சனைகளைத் தீர்க்கும் மாற்று வழியொன்றை இன்றைய நற்செய்தியில் இயேசு கூறுகிறார். இந்த நற்செய்தியைக் கேட்கும்போது நம் மனங்களில் நம்பிக்கை பிறக்கின்றதா? அல்லது, இயேசு கூறும் வார்த்தைகள் நடைமுறை வாழ்வுக்கு ஒத்து வராது என்று நமது மனம் சொல்கிறதா? உண்மையாகவே நம் உள்ளத்தில் என்னதான் நிகழ்கிறதென்று அலசிப் பார்ப்போமே. இயேசு தம் சீடர்களிடம் அன்று சொன்னது... இதோ, நம்மிடம் இன்று சொல்வது இதுதான்:
மத்தேயு நற்செய்தி 18: 15-17
உங்கள் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் உங்களுக்கு எதிராகப் பாவம் செய்தால் நீங்களும் அவரும் தனித்திருக்கும்போது, அவரது குற்றத்தை எடுத்துக்காட்டுங்கள். அவர் உங்களுக்குச் செவிசாய்த்தால் நல்லது; உங்கள் உறவு தொடரும். இல்லையென்றால் இரண்டு அல்லது மூன்று சாட்சிகளுடைய வாக்குமூலத்தால் அனைத்தும் உறுதி செய்யப்படும்என்னும் மறைநூல் மொழிக்கு ஏற்ப, உங்களோடு ஒன்றிரண்டு பேரைக் கூட்டிக் கொண்டு போங்கள். அவர்களுக்கும் செவிசாய்க்காவிடில், திருச்சபையிடம் கூறுங்கள்.

இப்போது நாம் கேட்ட இந்தப் பகுதியை மட்டும் வார்த்தைக்கு வார்த்தை அப்படியே நாம் பின்பற்றினால், உறவில் உருவாகும் பிரச்சனைகள் பெரிதும் விலகிவிடும். Interpersonal relationship அதாவது, நமக்கும், அடுத்தவருக்கும், குறிப்பாக, நமக்கும், நமக்கு நெருங்கியவர்களுக்கும் இடையே இருக்கவேண்டிய உறவைக் குறித்து எத்தனையோ மனநலவியல் நூல்கள் எழுதப்பட்டுள்ளன. அவற்றில் பல பக்கங்களில் விளக்கும் உண்மைகளை இயேசு ஒரு சில வரிகளில் விளக்கியுள்ளது போல் எனக்குத் தோன்றுகிறது. வாழ்க்கைக்கு மிகவும் தேவையான இந்தப் பாடங்களை விவிலியத்திலும், மனநலவியல் நூல்களிலும் எத்தனையோ முறை வாசித்திருக்கிறோம். இருந்தாலும், இப்பாடங்களைக் கற்று, தேர்ச்சி பெறமுடியாமல் தவறி விடுகிறோம். இன்று இந்த முக்கியமான பாடங்களை மீண்டும் பயில, அவைகளில் தேர்ச்சி பெற இயேசுவின் பாதங்களில் நாம் அமர்வோம்.

இன்றைய நற்செய்தியின் துவக்கமே ஒரு சாட்டையடிபோல, நம்மை விழித்தெழச் செய்கிறது. உங்கள் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் உங்களுக்கு எதிராகப் பாவம் செய்தால்…” என்பவை இயேசு கூறும் ஆரம்ப வார்த்தைகள். இந்த முதல் வரியில் இயேசு கூறியிருப்பதே ஒரு சவால் என்பதை உணர்ந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். “நீ உன் சகோதரன் அல்லது சகோதரிக்கு எதிராகப் பாவம் செய்திருந்தால்…” என்று இயேசு ஆரம்பித்திருந்தால், அது இயல்பாக இருந்திருக்கும். ஆனால், அவர் அப்படி செய்யவில்லை. “உங்கள் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் உங்களுக்கு எதிராகப் பாவம் செய்தால்…” என்று ஆரம்பத்திலேயே நம் சிந்தனைகளைப் புரட்டிப் போடுகிறார்.

பொதுவாக நம் குடும்பங்களில் தவறு செய்பவர் யாரோ, அவரிடமிருந்து தவறைச் சரி செய்வதற்கான முயற்சிகளையும் எதிர்பார்ப்போம். உதாரணமாக, நான் என் உடன் பிறந்த ஒருவரிடம் கோபமாகப் பேசியிருந்தால், அவரைத் தேடிச் சென்று மன்னிப்பு கேட்பது என் கடமை. இன்றைய நற்செய்தியின் ஆரம்பத்தில், இயேசு நமக்கு முன் வைக்கும் சவால் கடினமான ஒன்று. நம் உடன் பிறந்தவர் குற்றம் செய்யும்போது, அதுவும் நமக்கு எதிராகக் குற்றம் செய்யும்போது, அவர் நம்மைத் தேடி வந்து சமரச முயற்சிகளை ஆரம்பிக்க வேண்டும் என்று காத்திருக்காமல், நாம் அவரைத் தேடிச் செல்ல வேண்டும் என்று இயேசு கூறுகிறார். நம் உடன் பிறந்தோர் புரிந்த குற்றத்தைக் களைய நாம் முதல் முயற்சிகள் எடுக்க வேண்டும் என்று கூறுகிறார். நடக்கிற காரியமா இது? நடக்கிற காரியம் தான்... நடக்க வேண்டிய காரியமும் கூட.

இன்றைய நற்செய்தியின் ஆரம்ப வார்த்தைகளைக் கேட்டதும், என் மனதில் இயேசுவின் மற்றொரு கூற்று பளிச்சிட்டது. மலைப்பொழிவில் அவர் கூறிய வார்த்தைகள் அவை:
நீங்கள் உங்கள் காணிக்கையைப் பலிபீடத்தில் செலுத்த வரும்பொழுது உங்கள் சகோதரர் சகோதரிகள் எவருக்கும் உங்கள் மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால், அங்கேயே பலிபீடத்தின் முன் உங்கள் காணிக்கையை வைத்து விட்டுப் போய் முதலில் அவரிடம் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள். (மத். 5: 23-24)

காணிக்கை செலுத்தும் நேரத்தில் ஒருவருக்கு மனதில் நெருடல் எழுகிறது. தன் உறவுகள் சரியில்லை என்ற நெருடல். சரியில்லாத உறவுகளுக்கு யார் காரணம்? நாம் காரணமா? பிறர் காரணமா? "காணிக்கை செலுத்த வரும்போது, நீங்கள் உங்கள் சகோதரர், சகோதரிகள் மீது மனத்தாங்கல் கொண்டிருந்தால்..." என்று இயேசு சொல்லவில்லை. மாறாக அவர் தரும் சவால் இன்னும் தீவிரமானதாய் உள்ளது. பீடத்திற்கு முன் நீங்கள் நிற்கும் போது, உங்கள் சகோதரர், சகோதரிகள் எவருக்கும் உங்கள் மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால்... என்று இயேசு கூறியுள்ளார். அவர் தெளிவுபடுத்த விரும்புவது இதுதான்... உறவுகளில் தவறுகள் ஏற்படும்போது, யார் காரணம் என்ற கணக்கெல்லாம் பார்க்காமல், பிரச்சனையைத் தீர்க்கும் முதல் முயற்சிகள் நம்மிடமிருந்து வர வேண்டும் என்று இயேசு மலைப்பொழிவிலும், இன்றைய நற்செய்தியிலும் தெளிவாக்குகிறார்.

பிரச்சனையைத் தீர்க்க, குற்றத்தைக் களைய நாம் மேற்கொள்ளும் முதல் முயற்சிகள் எவ்விதம் இருக்கவேண்டும் என்பதை இயேசு இன்றைய நற்செய்தியில் தொடர்ந்து தெளிவாக்குகிறார். அவர் கூறும் முதல் படி என்ன?
நீங்களும் அவரும் தனித்திருக்கும்போது அவரது குற்றத்தை எடுத்துக்காட்டுங்கள். அவர் உங்களுக்குச் செவிசாய்த்தால் நல்லது; உங்கள் உறவு தொடரும்.
மிக, மிக அவசியமான, ஆனால், கடினமான ஒரு வழி. வயதால் மட்டுமல்ல, மனதாலும் முதிர்ச்சி அடைந்தவர்கள் பின்பற்றும் சரியான வழி இது. ஆனால், நம்மில் பலர் உறவுகள் விஷயத்தில் மட்டும் வளர மறுத்து, முதிர்ச்சி அடைய மறுத்து அடம் பிடிக்கும் குழந்தைப் பருவத்திலேயே நின்று விடுகிறோம். தவறிழைத்தவரைத் தனியே அழைத்து, மனம் விட்டுப் பேசுவதற்குப் பதில் பல மாறுபட்ட, சிக்கலான வழிகளைக் கடைபிடிக்கிறோம். பிரச்சனைகளைப் பெரிதாக்குகிறோம். நம் மெகாத் தொடர்கள் கூறும் வழி இது. பிரச்சனை பெரிதானால்தான் மெகாத் தொடர்கள் பல வாரங்கள் ஓடும்... நமது குடும்பங்களிலும் இதுபோல் நிகழ வேண்டுமா, என்ன? தொலைக்காட்சித் தொடர்களில் பிரச்சனை பெரிதாக வேண்டும், குற்றவாளி ஒழிய வேண்டும், பழிக்குப் பழி தீர்க்கப்பட வேண்டும். அப்போதுதான் நாடகம் விறுவிறுப்பாக இருக்கும். நடைமுறை வாழ்வில் நம் குடும்பங்களில் விறுவிறுப்பு வேண்டுமா, அல்லது, விடைகள், தீர்வுகள் வேண்டுமா என்று நாம் தீர்மானிக்க வேண்டும்.

இயேசு கூறும் இலக்கணப்படி அமையும் குடும்பங்களில் குற்றம் புரிந்தவர் திருந்தி வரவேண்டும் என்று காத்திருக்காமல், முதல் முயற்சிகளை நாம் மேற்கொண்டால், அங்கு பிரச்சனைகள் தீர வழியுண்டு. உறவுகள் வலுப்பட வழியுண்டு. அவர்கள் கூடிவரும் நேரத்தில் இறைவனின் பிரசன்னம் அங்கு நிறைந்து பொங்கவும் வழியுண்டு. இந்த உறுதியைத் தான் இயேசு இன்றைய நற்செய்தியின் இறுதி வார்த்தைகளாக சொல்லியிருக்கிறார்:

இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரின் பொருட்டு எங்கே ஒன்றாகக் கூடியிருக்கின்றார்களோ அங்கே அவர்களிடையே நான் இருக்கிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். மத்தேயு நற்செய்தி 18: 20








All the contents on this site are copyrighted ©.