2011-09-01 15:10:42

செப்டம்பர் 02 வாழ்ந்தவர் வழியில்.... ஜப்பானின் சரணடைவு


1945ம் ஆண்டு செப்டம்பர் 2ம் தேதி ஜப்பானின் அதிகாரபூர்வமானச் சரணடைதல் டோக்கியோ வளைகுடாவில் "மிசவுரி" என்ற அமெரிக்க ஐக்கிய நாட்டுப் போர்க் கப்பலில் நிகழ்ந்தது. இத்துடன் ஆறு ஆண்டுகளாக நடைபெற்று வந்த இரண்டாம் உலகப் போரும் உலகில் முடிவுக்கு வந்தது. 1945ம் ஆண்டு ஆகஸ்ட் 6 ம்தேதி ஹிரோஷிமா மீதும் ஆகஸ்ட் 9ம் தேதி நாகசாகி மீதும் அமெரிக்க ஐக்கிய நாடு அணுகுண்டுகளை வீசியது. ஆகஸ்ட் 8ம் தேதி சோவியத் ஜப்பான் மீது போர் அறிக்கையை வெளியிட்டது. வேறு வழியின்றி ஜப்பான் சரணடைந்தது. இந்தக் கையெழுத்து நிகழ்வு, ஐம்பது, நேச நாடுகளின் இராணுவ அதிபர்கள் மற்றும் பிற அதிகாரிகளின் முன்னிலையில் இடம் பெற்றது. இந்தக் கையெழுத்து நிகழ்வு நடைபெற்ற அரைமணி நேரத்துக்குள் அமெரிக்க ஐக்கிய நாட்டு 42 போர்க் கப்பல்கள் டோக்கியோ வளைகுடாவில் நுழைந்தன. அத்துடன் 13 ஆயிரம் அமெரிக்கப் படைவீரர்கள் ஜப்பானில் நுழைந்தனர். இந்தப் போர் நிறுத்த உடன்பாட்டின் மூலம் எல்லாவிதமானத் தாக்குதல்களை நிறுத்திக் கொள்வதற்கும் அனைத்துப் போர்க் கைதிகளை விடுதலை செய்வதற்கும் ஜப்பான் உடன்பட்டது. அமெரிக்க ஐக்கிய நாட்டு உயர் இராணுவ அதிபரின் அதிகாரத்தை ஜப்பான் ஏற்றாலும், ஜப்பான் பேரரசர் ஹிரோகிட்டோ நாட்டின் அடையாளத் தலைவராக ஏற்றுக் கொள்ளப்பட்டார். மனித வரலாற்றில் முதன்முதலில் அணுகுண்டுகள் வீசப்பட்ட மற்றும் அதிகமான இறப்புக்களை ஏற்படுத்திய இரண்டாம் உலகப் போரில் ஏழு கோடிக்கு மேற்பட்டோர் இறந்தனர். இயேசு சொன்னார் – அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர், ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர்.







All the contents on this site are copyrighted ©.