2011-08-31 13:46:02

திருத்தந்தையின் புதன் பொது மறைபோதகம்


ஆக 31, 2011. திருத்தந்தையின் விடுமுறை நாட்கள் கோடை விடுமுறை இல்லம் இருக்கும் காஸ்தல் கந்தோல்ஃபோவிலேயேத் தொடர்ந்து கொண்டிருப்பதால், இப்புதனும் தன் பொது மறைபோதகத்தை அந்த இல்ல வளாகத்திலேயே வழங்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
கடவுளை நோக்கி நம்மைக் கொண்டுச் செல்ல வல்ல வழிகளுள் ஒன்றான 'கலை வெளிப்பாடுகள்' குறித்து அங்கு கூடியிருந்த மக்களுக்கு எடுத்துரைத்தார் அவர். இந்த அழகின் பாதையின் ஆழமான அர்த்தத்தை மனிதன் மீண்டும் கண்டுக் கொள்ள வேண்டும். ஒரு சிலையின் முன், ஓவியத்தின் முன், பாட்டின் முன் அல்லது கவிதையின் முன் ஒருவிதமான மகிழ்வு உணர்வை நாம் அனுபவித்திருக்கலாம். அது ஒரு பளிங்குக் கல்லாகவோ, வர்ணம் தீட்டப்பட்டத் துணியாகவோ, இசைக் கலவையாகவோ, வார்த்தைகளின் தொகுப்பாகவோ மட்டும் நமக்குத் தெரிவதில்லை, மாறாக அதையும் தாண்டி, அது நம் இதயத்தைத் தொட வல்லதாய், ஒரு செய்தியை நமக்கு உணர்த்த வல்லதாய், நம் உணர்வுகளுக்குப் புத்துயிர் தர வல்லதாய் உள்ளது. அதேவேளை, இறைவனை நோக்கிய உண்மையான பாதைகளாக இருக்கும் கலை வெளிப்பாடுகளும் உள்ளன. ஒரு கோவிலினுள் நுழையும்போது நாம் செபத்திற்கான ஓர் அழைப்பை இயல்பாகவே உணர்கிறோம். திருவழிபாட்டுப் பாடல் நம் இதயத்தின் கம்பிகளை மீட்டிச் செல்வதுடன், நம் ஆன்மாவை இறைவனை நோக்கித் திருப்ப உதவுகின்றது. கலைகளின் இடங்களுக்கு நாம் மேற்கொள்ளும் பயணம், கலாச்சார அறிவு மேம்பாட்டிற்கான வாய்ப்பாக மட்டுமல்லாமல், இறைவனுடன் நாம் கொள்ளும் உறவையும் உரையாடலையும் ஊக்குவித்து பலப்படுத்தும் நேரமாகவும் இருக்கிறது. இவ்வேளையில், 27ம் திருப்பாடலின் ஜெப வார்த்தைகளான, 'நான் ஆண்டவரிடம் ஒரு விண்ணப்பம் செய்தேன். ஆண்டவரின் இல்லத்தில் என் வாழ்நாள் எல்லாம் நான் குடியிருக்க வேண்டும், ஆண்டவரின் அழகை நான் காண வேண்டும்' என்பதை உங்களுக்கு எடுத்துரைக்க விழைகிறேன். நாம் காண்பதையும் தாண்டிச்சென்று நோக்க வேண்டிய தேவையை காண்பிக்க வல்லதாகவும், முடிவற்ற அழகாய் இருக்கும் இறைவன் மீதான தாகத்தை வெளிப்படுத்துவதாகவும் கலை உள்ளது, என்ற திருத்தந்தை, கலைப்படைப்புகளின் அழகுக்கு உங்கள் மனங்களைத் திறந்தவர்களாகவும், இறைப்புகழ்ப்பாடலுக்கும் செபத்திற்கும் அந்த அழகு உங்களை அழைத்துச் செல்ல அனுமதிப்பவர்களாகவும் மாறும்படி உங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன் என்றார்.
இந்த புதன் பொது மறைப்போதகத்தின் இறுதியில் அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார் திருத்தந்தை.








All the contents on this site are copyrighted ©.