2011-08-31 15:45:52

காணாமல் போனவர்களுக்கான அகில உலக நாள் - ஐ.நா.அவை அறிவித்துள்ளது


ஆக.31,2011. காணாமல் போனவர்களுக்கான அகில உலக நாளாக ஆகஸ்ட் 30ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. உலகெங்கும் காணாமல்போன பல்லாயிரக் கணக்கானோர் மற்றும் அவர்கள் பற்றிய தகவல்களுக்காக காத்துக்கொண்டிருக்கும் அவர்களது உறவினர்களின் துயரம் குறித்து கவனத்தை ஈர்க்கும் வகையில் இச்செவ்வாயன்று ஐ.நா.அவை இந்த நாளை அறிவித்துள்ளது.
மனித உரிமைகள் பல வழிகளில் மீறப்படும் வகையில், சில நாடுகளில் ஆட்களைக் கட்டாயமாக கடத்தி, அல்லது வேறு வழியில் காணாமல் போகச் செய்யும் நடைமுறை மேற்கொள்ளப்படுவதை, இந்த நாளில் ஐ.நா. கண்டித்திருக்கிறது.
அதேவேளை, காணாமல் போனவர்களின் குடும்பங்களின் தேவைகள் எப்போதாவதுதான் கவனிக்கப்படுவதாகக் கூறும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், அத்தகைய குடும்பங்களுக்கு மேலும் உதவிகள் தேவை என்றும் கோரியுள்ளது.
உலகெங்கும் மொத்தமாக எத்தனை பேர் காணாமல் போயிருக்கிறார்கள் என்பது எவருக்கும் நிச்சயமாகத் தெரியாது. ஆனால், இந்த எண்ணிக்கை லட்சக்கணக்கில் இருக்கும் என்று நம்பப்படுகின்றது. இத்தகைய இக்கட்டான சூழ்நிலை வருடக்கணக்கில் தொடரலாம் என்று செஞ்சிலுவைச் சங்கம் கூறுகிறது.
கட்டாயமாகக் காணாமல் போகச் செய்யப்படுபவர்கள் குறித்த ஐ.நா. சாசனம் கடந்த வருடம் முதல் அமலுக்கு வந்தது. ஆனால், கட்டாயமாகக் காணாமல் போகச் செய்யப்படுதல் இன்னமும் ஒரு கவலைக்குரிய போக்காகத் தொடர்கிறதென ஐ.நா. அதிகாரிகள் கூறுகிறார்கள்.
சில நாடுகளில் மக்களாட்சியை முறையாகக் கோருவோரை அடக்கவோ, குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை அடக்கவோ அல்லது பயங்கரவாதத்தை அடக்கவோ இது ஓர் ஆயுதமாக பயன்படுத்தப்படுவதாகவும் ஐநா அதிகாரிகள் கூறுகிறார்கள்.
கட்டாயமாகக் காணாமல் செய்யப்படுதல் தடை செய்யப்பட வேண்டும் என்றும், தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் சட்ட நடவடிக்கைகளுக்கு உரிமையுடையவர்கள் என்றும், அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறியும் உரிமை அவர்களது குடும்பத்தினருக்கும் உள்ளது என்றும் ஐ.நா. வலியுறுத்துகிறது.







All the contents on this site are copyrighted ©.