கத்தோலிக்கத் திருச்சபையும், அகில உலக லூத்தரன் ஒன்றியமும் இணைந்து தாயாரித்து வரும்
அறிக்கை
ஆக.31,2011. திருச்சபைச் சீர்திருத்தங்களைப் பற்றி மார்ட்டின் லூத்தர் அறிக்கை விடுத்த
500ம் ஆண்டு நிறைவையொட்டி, கத்தோலிக்கத் திருச்சபையும், அகில உலக லூத்தரன் ஒன்றியமும்
இணைந்து அறிக்கையொன்றை தயாரித்து வருவதாக வத்திக்கான் அதிகாரி ஒருவர் கூறினார். திருத்தந்தை
16ம் பெனடிக்ட் செப்டம்பர் மாதம் ஜெர்மனிக்குத் திருப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் சூழலில்,
KNA எனப்படும் ஜெர்மன் கத்தோலிக்க நிறுவனம் ஒன்றுக்குப் பேட்டியளித்த கிறிஸ்தவ ஒன்றிப்புக்கான
திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் Kurt Koch இவ்வாறு கூறினார். தற்போது தயாரிக்கப்பட்டு
வரும் அறிக்கையில், 2000 ஆண்டுகளாய் வளர்ந்து வந்துள்ள கிறிஸ்தவ வரலாற்றின் ஒரு பகுதியாக
திருச்சபை சீர்திருத்தங்களைப் பற்றிய சிந்தனைகள் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. திருத்தந்தை
ஜெர்மனியில் மேற்கொள்ளவிருக்கும் பயணம் கிறிஸ்தவ ஒன்றிப்பை மையமாகக் கொண்டிருக்கும் என்ற
கருத்து தனக்கு மிகுந்த உற்சாகம் தருவதாக ஜெர்மன் பிரதமர் Angela Merkel கூறியுள்ளார்.