புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன் நிறுவனங்கள் மூலம் சேவையாற்றி வருகிறது நியூயார்க்
உயர் மறைமாவட்டம்
ஆகஸ்ட் 29, 2011. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐரீன் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு
உதவுவதில் கத்தோலிக்கப் பங்குத்தளங்களும், பள்ளிகளும் மருத்துவ மனைகளும் மிகுந்த ஈடுபாட்டுடன்
செயலாற்றி வருவதாக தலத்திருச்சபை அறிவிக்கின்றது. பாதிக்கப்பட்டுள்ள மக்களுடன் செபத்தில்
ஒன்றித்திருப்பதுடன், உதவி தேவைப்படுபவர்கள் அனைவருக்கும் அடைக்கலம் தர தலத்திருச்சபை
தயாராக உள்ளது என்றார் நியூயார்க்கின் பேராயர் திமோத்தி டோலன். பொதுமக்கள் பாதுகாப்பில்
ஈடுபட்டிருக்கும் அரசு அதிகாரிகளுடன் கத்தோலிக்கத் திருச்சபையின் பங்குத்தளங்கள், பள்ளிகள்,
பிறரன்பு நிறுவனங்கள், நலவாழ்வு அமைப்புக்கள் மற்றும் ஏனைய நிறுவனங்கள் ஒன்றிணைந்து நிவாரணப்பணிகளில்
ஈடுபட்டிருப்பதாகவும் கூறினார் பேராயர். நகரின் பல்வேறு பகுதிகளில் உருவாக்கப்பட்டுள்ள
அவசரகாலத் துயர்துடைப்பு முகாம்களில் நியூயார்க் உயர்மறைமாவட்ட சுயவிருப்பப்பணியாளர்கள்
உதவிப்பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறினார் பேராயர் டோலன்.