பாகிஸ்தானில் மீண்டும் ஒரு கிறிஸ்தவக் கோவில் தாக்குதலுக்குள்ளாகியுள்ளது
ஆகஸ்ட் 29, 2011. கடந்த சனியன்று அதிகாலையில் பாகிஸ்தானின் கராச்சி தூய வளன் கோவில்
கல்லெறிந்து தாக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளது குறித்து தங்கள் கவலையையும் அச்சத்தையும்
தெரிவித்துள்ளனர் அந்நாட்டு கத்தோலிக்கர்கள். மரச்சன்னல்கள், பளிங்கு கற்கள், சன்னல்
கண்ணாடிகள் பெருமளவில் சேதமடைந்துள்ளதாக தெரிவித்தார் குரு ரிச்சர்டு டி சூசா. 1000க்கும்
மேற்பட்ட கிறிஸ்தவர்கள் வாழும் நஸ்ராத் நகரின் ஏழு கோவில்களுள் ஒன்றான இக்கோவிலைத் தாக்கியவர்கள்
யார் என்பது தெளிவில்லாத நிலையில், காவல் துறையிடம் புகார் பதிவுச் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே,
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இக்கோவில் தாக்குதலுக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.