நலிவடைந்துள்ள அமெரிக்க ஐக்கிய நாட்டுப் பொருளாதாரம் குறித்து ஆயர் கவலை
ஆக.26,2011. வேலை என்பது, கடவுளின் படைப்பில் பங்கு கொண்டு பொது நலனைக் கட்டி எழுப்புவதால்
அது மாண்புடையதாக இருக்கின்றது என்று அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள் கூறினர். அமெரிக்க
ஐக்கிய நாட்டில் வருகிற செப்டம்பர் 5ம் தேதி கடைபிடிக்கப்படும் தேசியத் தொழில் தினத்தையொட்டி
அறிக்கை வெளியிட்ட அந்நாட்டு ஆயர் பேரவையின் நீதி மற்றும் மனித முன்னேற்றப் பணிக்குழுத்
தலைவர் ஆயர் Stephen Blaire, அந்நாட்டில் நலிவடைந்துள்ள பொருளாதாரம் குறித்த கவலையைக்
குறிப்பிட்டுள்ளார். வேலைவாய்ப்பையும், தரமான ஊதியத்தையும், தொழிலாளருக்குத் தேவையான
சலுகைகளையும் வழங்காத பொருளாதாரம் குறித்துக் கவலையை வெளியிட்ட ஆயர் Blaire, அமெரிக்க
தேசியத் தொழில் தினத்தில் பொருளாதாரக் குறியீடுகளையும் கடந்து சிந்திக்க வேண்டிய அவசியம்
ஏற்பட்டுள்ளது என்றார். அமெரிக்கர்கள், பிறரின் இலக்குகளுக்குச் சவால் விடுப்பதைக்
கைவிட்டு பொருளாதார வாழ்வின் பல்வேறு கூறுகளை மதிக்க முயற்சிக்க வேண்டுமெனவும் ஆயரின்
அறிக்கை வலியுறுத்துகிறது.