இம்மாதத்தில் இரண்டாவது தடவையாக சீரோ மலங்கரா கத்தோலிக்க ஆலயம் தாக்கப்பட்டுள்ளது
ஆக.26,2011. இந்தியாவில் இம்மாதத்தில் இரண்டாவது தடவையாக மற்றுமொரு சீரோ மலங்கரா கத்தோலிக்க
ஆலயம் தாக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம், Secunderabad லுள்ள அன்னைமரி மலங்கரா ரீதி
ஆலயத்தில், நாசவேலைக்காரர்கள், திருநற்கருணைப் பேழை, விவிலியம், திருப்பலிப் புத்தகம்
மற்றும் பிற பொருட்களைத் திருப்பலி பீடத்தில் வைத்து எரித்துள்ளனர் என்று அவ்வாலயப் பங்குக்குரு
Felix Thondalil கூறினார். நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் இதே ஆலயத்தை இந்துமதத் தீவிரவாதிகள்
தாக்கிப் பொருட்களைச் சேதப்படுத்தினர் என்றும் அக்குரு தெரிவித்தார். இம்மாதம் 15ம்
தேதி புனே நகரில் சீரோ மலங்கரா கத்தோலிக்க ஆலயம் ஒன்று தாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவம் தொடர்பாக, இதுவரை குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.