மெக்சிகோ நாட்டில் அருளாளர் இரண்டாம் ஜான்பால் அவர்களின் திருப்பண்டங்கள்
ஆக.25,2011. மெக்சிகோ நாட்டில் அமைதியும், நல்லிணக்கமும் வளர்வதற்கும், சிறப்பாக அந்நாடு
போதைப் பொருள் ஆதிக்கத்திலிருந்து விடுபடவும் அருளாளர் இரண்டாம் ஜான்பாலின் பரிந்துரைகளை
விசுவாசிகள் நாட வேண்டும் என்று மெக்சிகோ பேராயர் கர்தினால் நோர்பெர்தோ ரிவேரா கரேரா
கூறினார். அருளாளர் இரண்டாம் ஜான்பால் அவர்களின் திருப்பண்டங்கள் தற்போது மெக்சிகோவின்
பல்வேறு நகரங்களில் மக்களின் வணக்கத்திற்காக எடுத்துச் செல்லப்படுகின்றன. இப்புனித பயணத்தில்
மெக்சிகோவின் விசுவாசிகள் அனைவரும் பங்கேற்க வேண்டுமென கர்தினால் கரேரா அழைப்பு விடுத்துள்ளார். அருளாளர்
இரண்டாம் ஜான்பால் அவரது இரத்தம் அடங்கிய பாத்திரம் ஒன்று இஞ்ஞாயிறு வரை குவாதலுபே (Guadalupe)
பேராலயத்தில் மக்களின் வணக்கத்திற்காக வைக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து செப்டம்பர்
5 முதல் 8 வரை அது மெக்சிகோ நகரின் பேராலயத்தில் வைக்கப்பட்டிருக்கும் என்று செய்திக்
குறிப்பொன்று கூறுகிறது. இந்தத் திருப்பண்டமும், மெழுகால் வார்க்கப்பட்டுள்ள அருளாளர்
இரண்டாம் ஜான்பாலின் உருவமும் மெக்சிகோ நாட்டின் 90 மறை மாவட்டங்களுக்கும் மக்களின் வணக்கத்திற்காக
எடுத்துச் செல்லப்படும் என்று இச்செய்திக் குறிப்பு மேலும் கூறுகிறது.