அகில உலக பெண் காவல்துறை சமாதானம் காக்கும் விருது பெற்ற பாகிஸ்தான் பெண் அதிகாரி
ஆக.24,2011. ஐ.நா. வழங்கும் விருதுகளில் ஒன்றான அகில உலக பெண் காவல்துறை சமாதானம் காக்கும்
விருது பாகிஸ்தானைச் சேர்ந்த Shazadi Gulfamக்கு வழங்கப்பட்டுள்ளது. மிகவும் பாரம்பரியம்
மிக்க ஒரு கிராமத்தில் பெண்ணாகப் பிறந்து வளர்ந்த தனக்கு காவல்துறையில் சேர்வதற்கும்,
பயிற்சிகளில் ஈடுபடுவதற்கும் பல்வேறு பிரச்சனைகளும், தடைகளும் எழுந்தன என்றும், அவற்றையெல்லாம்
தாண்டி இன்று தான் இந்நிலையை அடைந்துள்ளது எவ்வகையிலும் எளிதானதாக இருந்ததில்லை என்றும்
Gulfam கூறினார். 1985ம் ஆண்டு பாகிஸ்தான் காவல் துறையில் இணைந்த Gulfam, இன்று ஐ.நா.காவல்
துறையில் ஒரு பிரிவின் தலைவராகப் பணி செய்து வருகிறார். போஸ்னியா, கோசொவோ ஆகிய நாடுகளில்
அமைதி காக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்த Gulfam, கோசொவோ நாட்டில் அரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட
Atifete Jahjaga ஒரு பெண் காவல்துறை அதிகாரியாக இருந்தார் என்றும், அவர் தனக்கு ஒரு பெரும்
தூண்டுதலாக இருந்தார் என்றும் எடுத்துரைத்தார்.