திருத்தந்தை, மத்ரித்தில் உலக இளையோரைச் சந்திக்கும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறார்
- திருப்பீடப் பேச்சாளர்
ஆக.13,2011. இஸ்பெயினின் மத்ரித்தில் நடைபெறும் உலக இளையோர் தினக் கொண்டாட்டங்களில் கலந்து
கொள்ளவிருக்கின்ற பெருமளவான இளையோரைச் சந்திக்கும் அந்த “வியத்தகு ஆன்மீக” நேரங்களை திருத்தந்தை
16ம் பெனடிக்ட் ஆவலுடன் எதிர்நோக்குவதாகத் திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்தந்தை
பெடரிக்கோ லொம்பார்தி கூறினார். மத்ரித்தில் வருகிற செவ்வாய்க்கிழமை தொடங்கும் உலக
இளையோர் தினம் மிகுந்த சவால் நிறைந்தது, எனினும், கொலோன், சிட்னி ஆகிய நகரங்களில் இளையோர்
மிகுந்த ஆர்வமுடன் கலந்து கொண்டதைப் பார்த்த அனுபவத்திலிருந்து திருத்தந்தை, இளையோருக்கு
விசுவாசச் சான்று வாழ்வை வழங்கக் காத்திருக்கிறார் என்று அருள்தந்தை லொம்பார்தி மேலும்
கூறினார். இவ்விளையோர் தின நிகழ்வுகளில் வருகிற வியாழனன்று கலந்து கொள்ளும் திருத்தந்தை,
நான்கு நாட்கள் அங்கிருந்து ஒன்பது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார். இந்நிகழ்வின் கடைசி
நாளான ஆகஸ்ட் 21ம் தேதி ஞாயிறன்று திருத்தந்தை நிகழ்த்தும் திருப்பலியில் 800க்கும் மேற்பட்ட
ஆயர்கள் கலந்து கொள்வார்கள் என்று அருள்தந்தை லொம்பார்தி தெரிவித்தார்.