ஆக.11,2011. இஸ்பெயினின் மத்ரித்தில் இம்மாதம் 16 முதல் 21 வரை நடைபெறவுள்ள 26வது உலக
இளையோர் தினத்தையொட்டி பரிபூரணபலனை அறிவித்துள்ளது அப்போஸ்தலிக்கப் பாவமன்னிப்பு அலுவலகம். மத்ரித்தின்
இவ்விளையோர் தினக் கொண்டாட்ட நாட்களில் திருப்பயண உணர்வுகளோடு கலந்து கொள்ளும் விசுவாசிகள்
இப்பலனைப் பெறுவார்கள். அத்துடன் உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும், இந்த நிகழ்வில்
ஆன்மீகரீதியில் பங்கு கொள்வோர் ஒவ்வொருவருக்கும் இப்பலனின் ஒரு பகுதி கிடைக்கும் என்று
இந்த வத்திக்கான் அலுவலக அறிக்கை கூறுகிறது. இஸ்பெயின் ஆயர் பேரவைத் தலைவரான மத்ரித்
பேராயர் கர்தினால் அந்தோணியோ மரிய ரோக்கோ வலேராவின் வேண்டுகோளின் பேரில் அப்போஸ்தலிக்கப்
பாவமன்னிப்பு அலுவலகம் இந்தப் பரிபூரணபலனை அறிவித்துள்ளதாக அவ்வறிக்கை கூறுகிறது. இந்த
உலக இளையோர் தினத்தில் பக்தியுடன் கலந்து கொண்டு தங்களது பாவங்களுக்காக உண்மையிலேயே மனம்
வருந்தி ஒப்புரவு அருட்சாதனத்தைப் பெற்று திருநற்கருணை உட்கொண்டு திருத்தந்தையின் கருத்துக்களுக்காகச்
செபிப்பவர்கள் இப்பலனை அடைவார்கள்.