ஆக.11,2011. கருப்பு உடை அணிந்து, கறுப்புக் கொடிகளை ஏந்தி, இந்தியாவின் பல இடங்களில்
கிறிஸ்தவர்கள் இப்புதனன்று கருப்பு நாள் கடைபிடித்தனர். கடந்த அறுபது ஆண்டுகளுக்கும்
மேலாக கிறிஸ்தவ சகோதர, சகோதரிகள் சந்தித்து வரும் இந்த கொடுமை, இந்நாளை ஒரு துயர நாளாக
மாற்றிவிட்டது என்று புது டில்லி பேராயர் Vincent Concessao கூறினார். பல இடங்களில்
நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் ஆயர்களும் தலைமை ஏற்று நடத்தினர் என்று இந்திய ஆயர் பேரவை
தலித் பணிக்குழுவின் செயலர் அருள்தந்தை Cosmon Arokiaraj கூறினார். தமிழ்நாட்டில் லால்குடி
எனும் இடத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருடன் கருப்பு நாள் போராட்டத்தில் அருள்தந்தை
ஆரோக்கியராஜ் ஈடுபட்டிருந்தார். 1950ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10ம் நாள் தாழ்த்தப்பட்டோருக்கான
சலுகைகள் கிறிஸ்தவர்களுக்குக் கிடையாது என்று இந்திய அரசு சட்டமியற்றிய அந்த நாளை கடந்த
சில ஆண்டுகள் கருப்பு நாளாக இந்தியக் கிறிஸ்தவர்கள் கடைப்பிடித்து வருகின்றனர் என்று
செய்திக் குறிப்பொன்று கூறுகிறது. இந்தக் கருப்பு நாள் போராட்டத்திற்கு முன்னதாக,
கடந்த மாதம் 25 முதல் 28 வரை புது டில்லியில் பாராளு மன்றத்திற்கு முன் 50 கத்தோலிக்க
ஆயர்களுடன் 10000க்கும் அதிகமான கிறிஸ்தவர்கள் உண்ணா நோன்பு போராட்டத்தில் ஈடுபட்டது
குறிப்பிடத் தக்கது.