பூர்வீகக்குடியினரின் அனைத்துலக நாளன்று ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் வெளியிட்ட
அறிக்கை
ஆக.10,2011. உலகின் ஒவ்வொரு நாட்டிலும் வாழும் பூர்வீகக்குடியினர் தங்கள் கலாச்சாரத்தைக்
காப்பதற்கும் வளர்ப்பதற்கும் ஒவ்வோர் அரசும் உதவிகள் செய்யவேண்டும் என்று ஐ.நா. பொதுச்
செயலர் பான் கி மூன் கூறினார். இச்செவ்வாயன்று கொண்டாடப்பட்ட பூர்வீகக் குடியினரின்
அனைத்துலக நாளன்று அறிக்கை வெளியிட்ட பான் கி மூன் இவ்வாறு கூறினார். பூர்வீகக்குடியினர்
தங்கள் தனித்துவத்தையும், பாரம்பரியத்தையும் காப்பதற்கும், வளர்ப்பதற்கும் பல சவால்களைச்
சந்திக்க வேண்டியுள்ளதென்று கூறிய பான் கி மூன், இம்மக்களின் கலாச்சாரக் கூறுகளை வர்த்தக
உலகம் பெரும்பாலும் தவறான வழிகளில் சீரழித்து வருவதையும் சுட்டிக் காட்டினார். உலகின்
90 நாடுகளில் 5000க்கும் அதிகமான பூர்வீகக் குடியினரின் குழுக்கள் உள்ளதென்றும், உலகில்
இன்று 37 கோடி பூர்வீகக் குடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர் என்றும் ஐ.நா. பொதுச் செயலர்
தன் அறிக்கையில் கூறினார்.