சீனாவில் ஓர் இளம்குரு, நான்கு மாதங்கள் தடுப்புக்காவலுக்குப் பின்னர் விடுதலை
ஆக.06,2011. சீனாவின் ஹெபெய் மாநிலத்தில் ஓர் இளம்குரு, ஏறக்குறைய நான்கு மாதங்கள் தடுப்புக்காவலில்
துன்புறுத்தப்பட்ட பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 2009ம் ஆண்டில் குருவாகத்
திருநிலைப்படுத்தப்பட்டதிலிருந்து Yanqin பங்குக் குருவாகப் பணியாற்றி வந்த அருட்பணி
Joseph Chen Hailong, சீருடை அணியாத காவல்துறை உறுப்பினர்களால் கடந்த ஏப்ரல் 9ம் தேதி
கைது செய்யப்பட்டார். ஏறத்தாழ இரண்டு மாதங்கள் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்த
அருட்பணி Chen, திருத்தந்தைக்கு விசுவாசமாக இருக்கும் கத்தோலிக்கத் திருச்சபையை விட்டுவிட
நச்சரிக்கப்பட்டார் எனவும், பசியாலும் ஊட்டச்சத்து இல்லாமையாலும் துன்புற்றார் எனவும்
ஊடகங்கள் கூறுகின்றன. மேலும், கடந்த ஜூனில் கைதான வேறு மூன்று குருக்கள் பற்றிய விபரங்கள்
இதுவரை எதுவும் தெரியவில்லை என ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது.