அணுஆயுதங்கள் இல்லாத வருங்காலத்தை உருவாக்குவதில் அனைத்து மனித சமுதாயமும் ஆர்வமுடன்
செயல்பட ஜெர்மன் ஆயர் வலியுறுத்தல்
ஆக.05,2011. அணுஆயுதங்கள் இல்லாத வருங்காலத்தை உருவாக்குவதில் ஐரோப்பா மட்டுமல்ல, அனைத்து
மனித சமுதாயமும் ஆர்வமுடன் செயல்படுமாறு ஜெர்மன் ஆயர் Heinz Josef Algermissen வலியுறுத்தினார்.
அணுஆயுதகளைத் தடைசெய்வதும் அவற்றைப் பயன்படுத்தாமல் இருப்பதும் உலகின் ஒட்டுமொத்தப்
பாதுகாப்புக்கென ஓர் அடி முன்னோக்கி வைப்பதாகவும், இவ்வாறு செயல்படுவது ஒவ்வொருவரின்
மனித உரிமை எனவும் ஜெர்மன் பாக்ஸ் கிறிஸ்டி அமைப்பின் தலைவரான ஆயர் Algermissen கூறினார். உலகெங்கிலுமுள்ள
பாக்ஸ் கிறிஸ்டி அமைப்பினர், 1945ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி ஜப்பானின் ஹிரோஷிமாவிலும்
9ம் தேதி நாகசாகியிலும் உலகின் முதல் அணுகுண்டுகள் வீசப்பட்டதன் நினைவை, செபம், கலந்துரையாடல்
மற்றும் செயல்திட்டங்கள் மூலம் கடைபிடிக்கவிருக்கின்றனர். இந்த அணுகுண்டுகள் வீசப்பட்டு
66 ஆண்டுகள் ஆகியும் இந்நகரங்களின் மக்கள் இன்னும் அவற்றின் தாக்கத்தை அனுபவிக்கின்றனர்.
இந்தத் தாக்குதல்களில் சுமார் இரண்டு இலட்சம் பேர் இறந்தனர்.