யாழில் மீள்குடியமர்ந்த மக்களின் உளநலம் மோசமாகப் பாதிப்பு! அமெரிக்க மருத்துவர் சங்கம்
ஆக.04, 2011. இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம் மாவட்ட மக்கள் மத்தியில் யுத்தம் மற்றும்
இடப்பெயர்வுடன் தொடர்புடைய உளவியல் பாதிப்பு குறிப்பிடத்தக்க அளவில் காணப்படுவதாக அமெரிக்க
மருத்துவர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். யுத்தத்தின் பின்னர், யுத்தத்தினால் இடம்பெயர்ந்த
மக்களின் உளநலம் குறித்துக் கண்டறிவதற்காகக் கடந்த 2009 ம் ஆண்டு ஜுலை மாதம் முதல் செப்டம்பர்
வரையில் அமெரிக்க மருத்துவர் சங்கத்தைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்களினால் இந்த ஆய்வு
மேற்கொள்ளப்பட்டது. இலங்கை தமிழ் மக்களிடையேயான உளநலப் பாதிப்பு, உள நலம் மிக மோசமாகப்
பாதிக்கப்பட்டுள்ள கொசோவா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் போருக்குப் பிந்திய மக்களின்
உளவியல் நிலைமையுடன் ஒப்பு நோக்கத்தக்கது என்று தங்கள் அறிக்கையில் கூறியுள்ளனர் மருத்துவ
நிபுணர்கள். யாழ் மாவட்டத்தில் உள்ள இடம் பெயர்ந்த மக்களில் 68 விழுக்காட்டினர்,
ஒரு மன நெருக்கீட்டுச் சம்பவத்திற்கு அல்லது பலதரப்பட்ட மனநெருக்கீட்டுச் சம்பவங்களுக்கு
இடப்பெயர்வின்போது ஆளாகியிருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.