ஆக.04, 2011. வன்னியில் இறுதிப் போர் நடைபெற்ற போதும் அதன் பின்னர் அரசப் படையினரால்
வவுனியாவில் உள்ள முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போதும் காணாமல் போன 630 சிறுவர்கள்
குறித்து கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்தத் தகவலும் இல்லை என அரசத் தகவல் திரட்டில் இருந்து
தெரியவருகின்றது என அனைத்துலக ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. வன்னியில் நடைபெற்ற கொடூரமானப்
போரின் போது குடும்பங்களிலிருந்து பிரிக்கப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்களுள்
600 பேர் கடந்த காலங்களில் தேடிக் கண்டுபிடிக்கப்பட்டு பெற்றோருடன் சேர்க்கப்பட்டுள்ளதாகவும்,
ஆனால் மேலும் 630 சிறுவர்களைக் காணவில்லை என்று பெற்றோர்களாலும் உறவினர்களாலும் முறையிடப்பட்டுள்ளதாகவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது. யுனிசெப் ஆதரவுடன் வவுனியா பிரதேச செயலகத்தால் ஆரம்பிக்கப்பட்ட
குடும்பங்களைக் கண்டறியும் பிரிவின் ஊடாக இதுவரை 600 சிறுவர்கள் அவர்களது பெற்றோர்களுடன்
சேர்க்கப்பட்டுள்ளனர். இன்னும் 630 சிறுவர்களுக்கு என்ன நடந்தது என்பது தெரிய வரவில்லை.