கென்ய அரசு உணவுப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்த ஆயர்கள் அறிவுரை
ஆக.02,2011. கிழக்கு ஆப்ரிக்க நாடாகிய கென்யாவில் பசியால் வாடும் மக்களின் எண்ணிக்கை
அதிகரித்து வரும்வேளை, இந்நெருக்கடியைக் கையாளுவதற்கு அரசு திறமையற்று இருக்கின்றது என்று
கென்ய ஆயர் ஒருவர் அரசைக் குறை கூறினார். கென்யாவில் சிலர் பசியால் வாடும் வேளை,
தனது மறைமாவட்டம் போன்ற பிற பகுதிகளில் மக்கள் ஏராளமானவற்றை அறுவடை செய்கின்றனர், சில
காய்கறிகள் நிலங்களில் அழுகிப்போய்க் கிடக்கும் அளவுக்கு அறுவடை அதிகமாக இருக்கின்றது
என்று Eldoret ஆயர் Cornelius Arap Korir கூறினார். இது எப்படி இருக்கிறதென்றால்,
அரசின் வலது கரம் செய்வது இடது கரத்திற்குத் தெரியாமல் இருப்பதையேக் காட்டுகின்றது என்று
ஆயர் கூறினார்.