ஜூலை 30,2011. இந்தியாவின் மிகப்பெரிய சுற்றுலாத்தலமான தாஜ்மகால், கடந்த ஆண்டில் மட்டும்
இருபது கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது என்று கூறப்படுகிறது. ஆக்ராவில் அமைந்துள்ள
காதல் நினைவுச் சின்னமான தாஜ்மகாலைப் பார்க்க தினந்தோறும் உலகின் பல்வேறு பகுதிகளில்
இருந்து ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர். இதனால், நுழைவுச் சீட்டு விற்பனை மூலம்,
தாஜ்மகால் கடந்த ஆண்டில், இருபது கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. இந்த வருவாய், முந்தைய
ஆண்டைவிட 15 விழுக்காடு அதிகரித்துள்ளது. கடந்த 2008-09ம் ஆண்டில் நுழைவுச் சீட்டு
மூலம், 14 கோடியே 36 இலடசம் ரூபாயும், 2009-10ம் ஆண்டில், 17 கோடியே 24 இலடசம் ரூபாயும்,
2010-11ம் ஆண்டில் 19 கோடியே 89 இலடசம் ரூபாயும் வருவாய் கிடைத்துள்ளன. இந்திய தொல்பொருள்
துறையின் கட்டுப்பாட்டில், நாடு முழுவதும் 116 பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள் உள்ளன.
இந்த நினைவுச் சின்னங்கள் மூலம், இந்திய தொல்பொருள் துறைக்கு, கடந்த 2010-11ம் ஆண்டில்
87 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டில், டில்லியில் உள்ள குதூப் மினார்
மூலம், 10 கோடி ரூபாயும், ஹூமாயூன் கல்லறை மூலம் 6 கோடி 15 இலடசம் ரூபாயும், செங்கோட்டை
மூலம் 5 கோடியே 90 இலடசம் ரூபாயும் வருவாய் கிடைத்துள்ளன.