பேச்சுவார்த்தைகளுக்கான உண்மையான விருப்பத்தைக் கொண்டுள்ளதாக சீனா கூறுவது பெரும்பொய்
என்கிறார் கர்தினால்
ஜூலை 28, 2011. திருத்தந்தையின் அனுமதியின்றி சீனாவில் ஆயர்கள் திருநிலைப்படுத்தப்பட்டுள்ளது,
தலத்திருச்சபையின் இயல்பான வாழ்வுக்கும் நற்செய்தி அறிவிப்புப் பணிகளுக்கும் இன்றியமையாதது
என சீன அரசு அறிவித்துள்ளது ஒரு கேலிக்கூத்து என குறை கூறியுள்ளார் ஹாங்காங் கர்தினால்
ஜோசப் சென் செக்கியூன். தேசியத் திருச்சபை என்ற ஒன்றைத் தன் கீழ் கொண்டு கிறிஸ்தவர்களை
அடக்கி ஆண்டுவரும் சீனத்திருச்சபை, தற்போது திருத்தந்தைக்கு விசுவாசமாக இருக்கும் மறைந்து
வாழும் கிறிஸ்தவர்களையும் தன் குடையின் கீழ் கொணர முயல்வதாக குற்றஞ்சாட்டினார் கர்தினால். தனிமனிதர்களின்
சுதந்திரத்தையும் மனச்சான்றின் சுதந்திரத்தையும் வன்முறைகள் கொண்டு அடக்கியதுடன், திருத்தந்தையின்
அதிகாரத்தையும் இரக்க உணர்வையும் மதிக்கத்தவறிய சீன அரசு, தாங்கள் பேச்சுவார்த்தைகளுக்கான
உண்மையான விருப்பத்தைக் கொண்டுள்ளதாக அறிவித்திருப்பது உலகின் மிகப்பெரிய பொய் என மேலும்
கூறினார் கர்தினால் சென்.