வட இலங்கை மக்கள் தொடர்ந்து பீதியுடன் வாழ்ந்து வருகின்றனர் : யாழ் துணை வேந்தர்
ஜூலை 26, 2011. முப்பதாண்டுகளாக போரினால் பாதிக்கப்பட்ட வட இலங்கை மக்கள் தொடர்ந்து
பீதியுடன் வாழ்ந்து வருவதாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர்
பாலசுந்தரம் பிள்ளை தெரிவித்துள்ளார். நீண்ட காலப் போர் மற்றும் பொருளாதார நெருக்கடிகளினால
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் போது அவர்களின் மனநிலை கவனத்திற் கொள்ளப்பட
வேண்டுமென லங்காதீப பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் சுட்டிக்காட்டியுள்ளார் அவர். வடக்கின்
பல பகுதிகளில் பௌதீக ரீதியான அபிவிருத்தி ஏற்பட்டுள்ள போதிலும் மக்கள் மத்தியில் இன்னமும்
அச்சம் நீடித்து வருவதாகத் தெரிவித்த அவர், வட பகுதி மக்களின் அச்சத்தைப் போக்கும் வகையில்
நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்ற விண்ணப்பத்தையும் முன்வைத்தார். வடக்கு மக்களின்
தீர்க்கப்படாத பல பிரச்சனைகள் இன்னமும் எஞ்சியிருப்பதாகவும், மக்களின் பிரச்சனைகளை அடையாளம்
கண்டு அவற்றுக்கு தீர்வுத் திட்டங்களை முன்வைக்க வேண்டுமெனவும் வலியுறுத்தினார் யாழ்ப்பாண
பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர். வேலையற்ற இளைஞர்கள் தொடர்பில் அரசு கூடுதல்
கவனம் செலுத்த வேண்டுமென பேராசிரியர் பாலசுந்தரம் பிள்ளை மேலும் வலியுறுத்தியுள்ளார்.