தேசிக விநாயகம் பிள்ளை (ஜூலை 27, 1876 - செப்டம்பர் 26, 1959) 20ம் நூற்றாண்டில் வாழ்ந்த
ஒரு புகழ் பெற்ற கவிஞர். இவர் 1876ம் ஆண்டு ஜூலை 27ம் தேதி பிறந்தார். பக்திப் பாடல்கள்,
இலக்கியம் பற்றிய பாடல்கள், வரலாற்று நோக்குடைய கவிதைகள், குழந்தைப் பாடல்கள், இயற்கைப்
பாட்டுக்கள், வாழ்வியல் போராட்ட கவிதைகள், சமூகப் பாட்டுக்கள், தேசியப் பாட்டுக்கள்,
வாழ்த்துப் பாக்கள், என பல்வேறு தளங்களில் கவிதைகள் புனைந்தவர். எட்வின் ஆர்னால்ட்
என்பவர் புத்தரின் வாழ்வைக் கவிதையாக வடித்த 'The Light of Asia' என்ற நூலை 'ஆசிய ஜோதி'
என்ற பெயரில் தமிழில் தழுவி எழுதினார். பாரசீகக் கவிஞர் உமர் கய்யாம் பாடல்களைத் தழுவி
தமிழில் எழுதினார். ஆய்வுத் துறையிலும் தேசிக விநாயகம் பிள்ளை பல அரியப் பணிகளை ஆற்றியிருக்கிறார்.
1922-இல் 'மனோன்மணியம் மறுபிறப்பு' என்ற திறனாய்வுக் கட்டுரையை எழுதினார். சென்னைப் பல்கலைக்கழகத்தின்
தமிழ்ப் பேரகராதி உருவாக்கத்தில் மதிப்பியல் உதவியாளராக இருந்தார். 1940இல் தமிழ்ச்
சங்கம் சென்னையில் நிகழ்த்திய 7வது ஆண்டு விழாவில் இவருக்குக் "கவிமணி" என்ற பட்டத்தை
அளித்துச் சிறப்பித்தது. அக்டோபர் 2005இல் இந்திய அரசு இவர் உருவம் பதித்தத் தபால்தலை
ஒன்றை வெளியிட்டு, சிறப்பித்தது.