2011-07-25 16:32:42

ஜூலை 26 வாழ்ந்தவர் வழியில் .....


1933ம் ஆண்டு ஜூலை 26ம் தேதி இம்மண்ணில் உதித்த மு.கு.ஜகந்நாதராஜா, தெலுங்குக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது முன்னோர்கள் சில நூறு ஆண்டுகளுக்கு முன்பாக ஆந்திராவில் இருந்து வந்து தமிழகத்தில், குறிப்பாக இராஜபாளையத்தில் குடியேறினார்கள். இராஜபாளையத்தில் உள்ள ராஜூக்கள் என்பவர்கள் இவரது வம்சாவழியினர். மு.கு. ஜகந்நாதராஜா, ஒரு பன்மொழிப் புலவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், சமஸ்கிருதம், பாலி, ஹிந்தி, ஆங்கிலம், துளு எனப் பல இந்திய மொழிகளை அறிந்தவர். மன்னர் கிருஷ்ண தேவராயர் தெலுங்கில் இயற்றிய சூடிக் கொடுத்தவள் என்ற “ஆமுக்த மால்யத” காவியத்தை 1988 ஆம் ஆண்டு தமிழாக்கம் செய்தார். 1989 ஆம் ஆண்டு இந்த மொழிபெயர்ப்பு நூலுக்கு சாகித்ய அகாடமி விருது பெற்றார். இது, முதன் முதலில் தமிழில் மொழிபெயர்ப்பு விருது பெற்ற நூலாகும். கபிலர் எழுதிய குறிஞ்சிப்பாட்டைத் தெலுங்கில் மொழிபெயர்த்து அறிமுகப்படுத்தினார். சங்க இலக்கியம் பற்றி தெலுங்கில் அறிமுகமான முதல் நூல் இது. இதேபோல முத்தொள்ளாயிரத்தினை தெலுங்காக்கம் செய்துள்ளார். தொ.மு.சி. ரகுநாதன் எழுதிய 'பாரதி-காலமும் கருத்தும்' நூலை சாகித்ய அகாதமிக்காகத் தெலுங்கில் மொழி பெயர்த்தார். திருக்குறளைத் தெலுங்கிலும், முத்தொள்ளாயிரத்தைக் கன்னடம், மலையாளத்திலும் மொழியாக்கம் செய்துள்ளார் மு.கு. ஜகந்நாதராஜா.
தெலுங்கு மகாகவியான குரஜாபி அப்பாராவ் எழுதிய 'கன்யா சுல்கம்' நூலைத் தமிழில் 1963 இல் மொழி பெயர்த்தார். அதன் பிறகு 'கேரி' - உன்னவ லட்சுமி நாராயணா, 'ஆமுக்த மால்யதா' - கிருஷ்ணதேவராயர், 'வேமனா கவிதைகள்', கனா பூரணோதயம் - பிங்கிளி சூரன்ன, தெலுங்கு நீதி நூலான 'சுமதி சதகம்', தேவுபல்லி கிருஷ்ண சாஸ்திரியின் கவிதைகளான 'தேய்பிறை', கந்துகூரி லிங்கம் கட்டுரைகள், காதா சப்தசதி எனும் ஆந்திர நாட்டு அகநானூறு என பல நூல்களை மொழிபெயர்த்தார்.
'மிளந்த பண்ஹா' என்ற பெளத்த தத்துவ நூலை பாலி மூலத்தில் இருந்து மொழிபெயர்த்தார். இது மாக்ஸ்முல்லர் வெளியிட்ட கீழ்த்திசைப் புனித நூல் வரிசையில் இடம் பெற்ற சிறப்பான புத்தகம். பௌத்தத் தத்துவத்தை விளக்கும் 'உதானம்' என்ற அரிய நூலை மொழியாக்கம் செய்தார். தெலுங்கு இலக்கிய வரலாறு எழுதிய நிடதவோலு வெங்கட்டராவ் 'நாஞ்சாரு பரிணயமு' என்ற ஆண்டாள் சரிதம் கூறும் யட்ச கான நூலை ராஜபாளையத்தில் ஏட்டுப்பிரதியாகக் கண்டுபிடித்து, அதைப் பிரதியெடுத்துப் பதிப்பித்துள்ளார். வெளி வராத ஏழு இலக்கியங்களைத் தெலுங்கு இலக்கிய உலகிற்குத் தந்திருக்கிறார். மு.கு.ஜகந்நாதராஜா, 2008ம் ஆண்டு டிசம்பர் 2ம் தேதி இறந்தார்.








All the contents on this site are copyrighted ©.