நூறாண்டு காணும் அனைத்துலக தெரசியன் கழகத்தினருக்குத் திருத்தந்தை வாழ்த்து
ஜூலை 22,2011. அனைத்துலக தெரசியன் கழகத்தைச் சேர்ந்தவர்கள் கிறிஸ்துவின் பிரசன்னத்தில்
தங்களது பணிவாழ்வைப் புதுப்பித்துக் கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார் திருத்தந்தை 16ம்
பெனடிக்ட். அனைத்துலக தெரசியன் கழகம் தொடங்கப்பட்டதன் நூறாம் ஆண்டையொட்டி ஸ்பெயின்
நாட்டின் மத்ரித்தில் இம்மாதம் 19ம் தேதியிலிருந்து மாநாட்டை நடத்தி வரும் அக்கழக உறுப்பினர்களுக்குத்
திருத்தந்தையின் பெயரில் செய்தி அனுப்பிய திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே,
திருத்தந்தையின் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். கல்வி மற்றும் கலாச்சாரத்தின்
வழியாக மனித மற்றும் சமூக மதிப்பீடுகளை வளர்க்கத் திருச்சபையின் நற்செய்திப்பணிக்கு உதவி
வருகிறது அனைத்துலக தெரசியன் கழகம். புனித பியத்ரோ பொவேதா என்பவரால் 1911ம் ஆண்டில் தொடங்கப்பட்ட
இச்சர்வதேச கழகத்தில், ஐரோப்பா, அமெரிக்கா, ஆசியா மற்றும் ஆப்ரிக்காவின் 30 நாடுகளைச்
சேர்ந்தவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.