அக்டோபர் மாத இறுதியில் உலக மக்கள் தொகை 700 கோடியைத் தொடும்
ஜூலை 21, 2011. ஒரு வினாடிக்கு 5 குழந்தைகள் என்ற விகிதத்தில் பிறப்புகள் இடம்பெறுவதால்,
வரும் அக்டோபர் மாத இறுதியில் உலகின் மக்கள் தொகை 700 கோடியைத் தொடும் என நிபுணர்கள்
மதிப்பீடு செய்துள்ளனர். கடந்த 1960ல் உலக மக்கள் தொகை 300 கோடியாக இருந்தது, 40
ஆண்டுகளில் அதாவது 1999ல் அது இரட்டிப்பாகி 600 கோடியானது. இப்போது ஒவ்வொரு வினாடிக்கும்
5 குழந்தைகள் பிறப்பதால், மக்கள் தொகை ஆண்டுக்கு 7.8 கோடி அதிகரித்து, வரும் அக்டோபர்
மாத இறுதியில் 700 கோடியைத் தொடும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதே நிலை நீடித்தால்,
2025ம் ஆண்டில் மக்கள் தொகை 800 கோடியாவும், 2050ம் ஆண்டில் 900 கோடியாகவும் அதிகரிக்கும்
என ஐ.நா. அவை தெரிவித்துள்ளது. ஏழை நாடுகளில் வேகமாக மக்கள் தொகை அதிகரித்து வரும்
நிலையில், ஐரோப்பிய நாடுகள் மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளிலோ நிலைமை எதிர்மாறாக உள்ளது
என அறிவிக்கப்பட்டுள்ளது.