திருத்தந்தையின் ஜெர்மனிக்கானத் திருப்பயணத் திட்டங்கள்
ஜூலை20,2011. வருகிற செப்டம்பர் 22 முதல் 25 வரை திருத்தந்தை 16ம் பெனடிக்ட் ஜெர்மனிக்கு
மேற்கொள்ளும் திருப்பயணம் குறித்த விவரங்களை இப்புதனன்று வெளியிட்டது திருப்பீடம். செப்டம்பர்
22ம் தேதி உள்ளூர் நேரம் காலை 8.15க்கு உரோம் Ciampino விமான நிலையத்திலிருந்து புறப்படும்
திருத்தந்தை பெர்லின் Tegel சர்வதேச விமான நிலையத்தை அடைந்து வரவேற்பு நிகழ்ச்சிகளில்
கலந்து கொள்வார். அன்று பெர்லினில் ஜெர்மன் அரசுத்தலைவரைச் சந்தித்த பின்னர் மாலையில்
நாடாளுமன்றம் செல்வார். அன்று மாலை யூதசமூகப் பிரதிநிதிகளைச் சந்திப்பார். பின்னர் பெர்லின்
ஒலிம்பிக் மைதானத்தில் திருப்பலியும் நிகழ்த்துவார். 23ம் தேதி முஸ்லீம் மதப் பிரதிநிதிகளைச்
சந்தித்தல், Erfurt நகரில் ஜெர்மன் இவாஞ்சலிக்கல் கிறிஸ்தவ சபைப் பிரதிநிதிகளைச் சந்தித்தல்,
Etzelsbach சென்று அன்னைமரி வழிபாட்டில் கலந்து கொள்ளுதல், மீண்டும் Erfurt செல்தல்,
24 மற்றும் 25ம் தேதிகளில் Freiburg im Breisgau ல் நிகழ்ச்சித் திட்டங்களை நிறைவேற்றல்,
பின்னர் உரோமைக்குப் புறப்படுதல் ஆகியவை இப்பயணத்திட்டங்களில் உள்ளன. ஜெர்மனிக்கான
இத்திருப்பயணம் “கடவுள் இருக்குமிடத்தில் எதிர்காலம் இருக்கின்றது” என்ற தலைப்பில் இடம்
பெறும்.