இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே 1999ல் காஷ்மீரின் கார்கிலில் இடம்பெற்ற போரில்
ஜூலை 7ந்தேதி உயிரிழந்து இந்தியாவின் உயரிய விருதான பரம் வீர் சக்ரா விருதைப் பெற்றவர்
25 வயது இளைஞர் கேப்டன் விக்ரம் பாத்ரா. 1974ம் ஆண்டு செப்டம்பர் 9ம் தேதி ஹிமாச்சல
பிரதேசத்தில் பிறந்து தன் 22ம் வயதிலேயே இந்திய இராணுவத்தில் இணைந்த விக்ரம் பாத்ரா,
விரைவிலேயே கேப்டனாக பதவி உயர்வு பெற்று, கார்கில் போரின்போது ஒரு பிரிவுக்குத் தலைமை
தாங்கிச் சென்றார். போரில் எதிரிகளை வென்று பல சாகசங்கள் புரிந்த விக்ரம் பாத்ரா, போரில்
காயமுற்ற ஓர் அதிகாரியைக் காப்பாற்றும் முயற்சியில், எதிரிகளால் 1999 ஜூலை 7ம் நாள் கொல்லப்பட்டார்.
இவருக்கு அதே ஆண்டு ஆகஸ்ட் 15ந்தேதி, இந்தியாவின் 52வது சுதந்திர தினத்தன்று, இந்திய
இராணுவத்தின் மிக உயரிய கௌரவமான பரம் வீர் சக்ரா விருது வழங்கப்பட, அதனை விக்ரம் பாத்ராவின்
தந்தை பெற்றுக் கொண்டார். தாய் மண்ணிற்காக உயிர் நீத்த விக்ரம் பாத்ரா ஒருமுறை கூறினார், 'நான்
இந்திய கொடியை ஏற்றிவிட்டு வெற்றியுடன் திரும்புவேன் அல்லது அக்கொடியிலேயேச் சுற்றப்பட்டுத்
திரும்புவேன்' என்று.