தமிழறிஞரும், நூலாசிரியரும், தனித்தமிழ் இயக்கத்தில் முதன்மையான பங்கு வகித்தவர்களில்
ஒருவருமான பரிதிமாற் கலைஞர், மதுரை அருகே விளாச்சேரி எனும் ஊரில் 1870ம் ஆண்டு ஜூலை
6ம் தேதி பிறந்தார். இவர் உயரிய செந்தமிழ் நடையில் பேசுவதிலும் எழுதுவதிலும் வல்லவர்.
நாடகப் புலமை பெற்றவர். 'தமிழ் மொழி வரலாறு' போன்ற ஆய்வு நூல்களையும், கலாவதி, ரூபாவதி
போன்ற நாடக நூல்களையும், நாடக இலக்கணமான நாடகவியலையும் இயற்றிவர். இவருக்குப் பெற்றோர்
இட்ட பெயர் சூரியநாராயணன். தமிழ்மொழி மீது கொண்ட பற்றினால் தனது பெயரை வடமொழி கலக்காத
தூயத்தமிழில் பரிதிமாற் கலைஞர் என்று மாற்றிக்கொண்டார். இளங்கலை பட்டப்படிப்பில் தமிழ்மொழியிலும்,
மெய்யியலிலும் மாநிலத்திலேயே முதலாவதாகத் தேறினார். வடமொழியற்ற நல்ல தமிழ்மொழி வேண்டும்
என்பதில் பெரிதும் ஆர்வம் கொண்டிருந்தார். 33 ஆண்டுகளே வாழ்ந்த இவர் 1903ம் ஆண்டு நவம்பர்
2ம் தேதி மறைந்தார். இவரது மறைவைக் குறித்து, ஸ்காட்லாந்தைச் சேர்ந்த பேராசிரியர் மில்லர்
பின்வருமாறு புலம்பி அழுதுள்ளது அவரது ஆளுமைக்குச் சான்றாகும்: “என்புருவம் சுருக்கம்
ஏறி, கண்களை மறைக்கும் முதுமையில் வாடுகின்றேன் நான். ஆனால் நடுவயது வருவதற்கு முன்னரே
நற்றமிழ்ப்பரிதி அகன்றானே.”