குடியேற்றதாரரைச் சட்ட ரீதியாகப் பாதுகாப்பும் பொறுப்பை அரசுகள் ஏற்க வேண்டும் - அமெரிக்க
ஆயர்கள் வலியுறுத்தல்
ஜூலை05,2011. குடியேற்றதாரர்களுக்குச் சட்ட ரீதியாகப் பாதுகாப்பு வழங்கும் பொறுப்பை அரசுகள்
ஏற்று நடத்துமாறு வடக்கு மற்றும் மத்திய அமெரிக்க நாடுகளின் ஆயர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். வட
அமெரிக்கா, மத்திய அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளில் குடியேற்றதாரர் பெருந்துன்பங்களை
எதிர்நோக்குவதைத் தாங்கள் நேரடியாகக் காண முடிகின்றது என்று அந்நாடுகளின் ஆயர்கள் இணைந்து
வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். மத்திய அமெரிக்க நாடான கோஸ்டா ரிக்காவின்
சான் ஹோசேயில் கூட்டம் நடத்திய ஆயர்கள், கடந்த ஆண்டில் எழுபதுக்கும் மேற்பட்ட தென் அமெரிக்கா
மற்றும் மத்திய அமெரிக்கக் குடியேற்றதாரர் கடத்தப்பட்டு வட மெக்சிகோவில் கொல்லப்பட்டனர்
என்று கூறினர். 2008க்கும் 2009க்கும் இடைப்பட்ட காலத்தில் 9,758 குடியேற்றதாரர் கடத்தப்பட்டனர்
என்று மெக்சிகோ தேசிய மனித உரிமைகள் அவை கூறுகிறது.